Sunday, January 6, 2013

தமிழ் வளர்த்த செம்மலர்


முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்யப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்ப் பண்பாட்டுடன், கட்சியை வளர்த்த பெருமை ஜீவாவையே சாரும்.
இத்தகைய பெருமைக்குரிய ஜீவா என்ற ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை-உமையம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர் ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து எனும் பெயரை இட்டனர்.
காந்தீயத் தொண்டர்
ஜீவா தம் இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது தொண்டரானார். காந்திய வெளியீடுகளைப் படித்தார். அந்தக் காலத்தில் காந்தீயக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு நாடகம் நடத்தி வெள்ளையரைக் கலங்க வைத்த தியாகி விஸ்வநாததாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். ஜீவா அவர்கள் சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடையவராக ஜீவா விளங்கினார். மேலும் ஒன்பதாவது படிக்கும்போதே கவிதைகள் எழுதும் திறம் படைத்தவராக ஜீவா திகழ்ந்தார். அவர் காந்தியையும், கதரையும் பற்றி அதிகமாகக் கவிதைகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா அவர்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது “சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்” என்ற நாவலை எழுதினார்.மேலும் “ஞானபாஸ்கரன்” என்ற நாடகத்தையும் அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றி அந்த நாடகத்திலும் நடித்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் இணைதலும் கதர் அணிதலும்
காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தேசபக்தர் திருகூடசுந்தரம் அவர்களின் பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. ஜீவா அவர்கள் அவரது பேச்சால் தூண்டப்பட்டு அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார். அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.
ஜீவாவின் துவக்க காலம் கதர், காங்கிரஸ் போன்றவைகளில் ஆழ்ந்த நாட்டம் கொண்டிருந்திருக்கிறது. அவருடைய தாயார் மரணத்தின் போது கொள்ளி வைக்கும்போது கட்டிக்கொள்ளும் கோடித்துணிக்காக கதராடையைக் கேட்டிருக்கிறார் ஜீவா. அது மறுக்கப்பட்டதால் தனது தாயாருக்கு கொள்ளி போடவும் மறுத்திருக்கிறார். பின்னர் அவருடைய சகோதரர் நடராஜனை வைத்து தாயாரின் இறுதிச் சடங்கினை உறவினர்கள் முடித்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி ஜீவா அவர்களின் காந்தீயப் பற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சிறை செல்லல்
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. இளைஞர் உலகம் கொந்தளித்து எழுந்தது. ஜீவா அவர்கள் வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத்சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது. சிறையிலிருந்து பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய “நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா. ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். ஆங்கிலேய அரசு அதற்காகச் ஜீவாவைக் கைதுசெய்து, கை-கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
தீண்டாமை எதிர்ப்பு
தீண்டாமை என்பது மிகவும் கொடுமையாக உலவி வந்த காலகட்டம். ஆலயப்பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட காலம். நாஞ்சில் நாட்டின் ஊர்களில் கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய தெருக்களிலும் தெரு மறிச்சான் கட்டி விழா தொடங்கி விட்டது என்று அறிவிப்பு செய்வார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் அந்தத் தெருக்களில் நுழையக் கூடாது என்று தெருவில் போடப்படும் தடுப்புத்தான் தெருமறிச்சான் என்பதாகும். இதைக் கண்டு மனம் வெதும்பிய ஜீவா சேரியைச் சார்ந்த தனது இரு நண்பர்களை அழைத்துக் கொண்டு அந்த தெருமறிச்சானைப் பிடுங்கியெறிந்து தாண்டி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். நாஞ்சில் நாட்டில் நடந்த ஆலயப்பிரவேசப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக ஜீவா திகழ்ந்தார் என்பதற்கு இச்சம்பவம் காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் அவரது தந்தை ஊர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இதனால் தந்தை மகன், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் தனது 17-ஆவது வயதில் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
வ.வே.சு. ஐயரின் ஆசிரமத்தில் பணியாற்றல்
ஜாதி வேறுபாடு பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்டு வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் அச்செயலைக் கடுமையாக எதிர்த்தனர்.வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஜீவானந்தம் அவர்கள் தமது பணியைத் துறந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அப்போது ஏற்பட்ட போராட்டங்களினால் அந்த ஆசிரமம் மூடப்பட்டது.
காந்தி ஆசிரமம் உருவாக்குதல்
வ.வே.சு ஐயரின் ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊருக்கு வந்து அங்கு காந்தியடிகள் பெயரில் ஓர் ஆசிரமத்தை ஜீவா உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித் தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை “உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டார்.
காந்திஜியின் பாராட்டு
ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்: “உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும் வளர்ச்சியையும் கருதியாவது தனித் தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித் தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?” என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது. “உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார். இறுதிவரை ப.ஜீவானந்தம் – ஜீவா என்றே அழைக்கப்பட்டார். ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி வருகைபுரிந்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?” என்றார். அதற்கு, “இந்தத் தேசம்தான் எனக்குச் சொத்து” என்று ஜீவா பதிலளித்தார். ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார். பிறகு காந்திஜி, “இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து” என்றார்.
ஜீவாவின் பொதுப்பணி
சிராவயலில் ஆசிரமம் நடத்திக் கொண்டிருந்தபோது வ.உ.சிதம்பரனார் அங்கு வருகை புரிந்தபோது மாணவர்களை நூல் நூற்க வைப்பது குறித்து மிகவும் தாக்கிப் பேசியிருக்கிறார். வாள்பிடிக்க வேண்டிய கைகளை நூல் நூற்க வைப்பது ஏன் என்றும் கேள்விகேட்டு பெண்களைப் பற்றியும் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ஜீவா நூல் நூற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தைரியமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது வஉசியின் பேச்சில் வெளிப்பட்ட பெண்களைப் பற்றிய தவறான கருத்துக்களை மிகவும் மனஉறுதியுடன் சுட்டிக்காட்டி அவருடைய கருத்துக்களை ஜீவா மறுத்துரைத்தார். ஜீவாவின் மனஉறுதியை மிகவும் பாராட்டிய வஉசி பின்னாளில் பெண்களைப் பற்றிய தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டதையும் அதில் ஜீவாவின் பங்கு பற்றியும் தமது நூல் எழுதினார் என்பது நோக்கத்தக்கது.
சிராவயல் ஆசிரமத்தில் பல சிறப்பான செயல்களை ஜீவா அவர்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவைகளை அக்காலத்திய சமூக நடைமுறை மனதில் கொண்டு பார்க்கும் போது அச்செயலின் சிறப்பு நமக்கு விளங்கும். பல ஆதி திராவிடக் குழந்தைகளுக்கு கௌதமன், மணிவாசகன், மணித்தொண்டன், கிளிமொழி, மங்கையர்க்கரசி போன்ற பெயர்களைச் சூட்டி அவர்களுக்கு வடமொழி சுலோகங்களைப் பயிற்றுவித்து பல பொது மேடைகளில் அவர்களை அச்சுலோகங்களை சொல்லும்படி செய்தார் ஜீவா.
சிராவயல் ஆசிரமத்தில் இருந்து வெளியேறல்
சிராவயல் ஆசிரமத்தின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் அங்கிருந்து ஜீவா வெளியேறினார். ஜீவாவின் தீவிர அரசியல் ஈடுபாடு படிப்படியாக அந்நாளில் நிலவிய அரசியல் சூழலில் தீவிரமடைந்து வந்தது. அத்தீவிரம் 1932-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்குகொள்ள வைத்து ஜீவாவிற்குச் சிறைவாசம் பெற்றுத்தந்தது. அந்த ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ்காரராக சிறைக்குள் புகுந்த ஜீவா நவம்பர் மாதம் சிறையை விட்டு வெளியேறும்போது சிறைக்குள் கிடைத்த நட்பு மற்றும் அங்குக் கிடைத்த நூல்களின் ஈர்ப்பில் கம்யூனிஸ்டாக வெளியே வருகிறார்.
சிங்காரவேலருடன் நட்பு
இக்காலகட்டத்தில் பொதுஉடைமை இயக்க முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் சிங்காரவேலரின் நட்பு ஜீவாவுக்குக் கிடைத்தது. சிங்காரவேலர் தன்னுடைய வீட்டு நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள ஜீவாவுக்கு அனுமதி அளித்தது ஜீவாவின் வாழ்வில் மிகப்பெரிய புதிய வாயிலைத் திறந்து வைத்தது போலாயிற்று எனலாம்.
தமிழகத்தின் முதல் பொதுவுடமை வாதியாகக் கருதப்படும் சிங்காரவேலருக்கும் ஜீவாவுக்கும் உள்ள ஒருமைப்பாடு இதர அரசியல் தலைவர்களிடமோ சுதந்திர போராட்ட காலத்திய பொதுவுடமைவாதிகளிடமோ காணப்படாத ஒரு பண்பாடு ஆகும். இருவரும் ஒரே சமயத்தில் சமூக விடுதலை தளத்திலும் செயலாற்றியிருப்பது இவ்விரு தலைவர்களும் ஒரே சமயத்தில் சுயமரியாதை இயக்கத்திலும் தேசவிடுதலைத் தளத்திலும் முன்னணியில் நின்று, தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது.
இல்லற வாழ்க்கை
கடலூர் சட்டமன்றத் தொகுதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் மகளான கண்ணம்மாவை ஜீவா திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948-ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர். அவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.
தனித்தமிழ் ஆர்வலர்
சிராவயல் ஆசிரமத்தில் காந்திய நிர்மாணத் திட்டத்தோடு தேவாரம், திருவாசகம், திருக்குறள், நிகண்டு மற்றும் பாரதியார் பாடல்கள் ஆகியவை போதிக்கப்பட்டன. இங்குதான் சொரிமுத்து ஜீவானந்தமாக பெயர் மாற்றம் பெற்றிருக்கிறார். இந்த ஆசிரமத்தில் இருந்த காலத்தில்தான் ஜீவாவுக்கு சங்க இலக்கியம் முதல் பாரதி வரையிலான எல்லா நூல்களையும் படிக்க வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. கம்பனிலும் பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.
தமிழ் நூற்கல்வியும் சேரன்மாதேவி ஆசிரமத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவமும் சேர்ந்து ஜீவாவை தீவிரமான வடமொழி எதிர்ப்பாளராகவும் தனித்தமிழ் ஆர்வலராகவும் மாற்றியது எனலாம்.
ஜீவா எதிலும் தீவிரம் காட்டும் பிறவிக்குணம் வாய்ந்தவர். இக்குணம் தனித்தமிழில் தீவிர ஆர்வம் கொண்ட ஜீவானந்தத்தை உயிரின்பனாக பெயர் மாற்றம் செய்திருக்கிறது. இவருடைய துடிப்பான தனித்தமிழ்ப் பேச்சை மிகவும் ரசித்த பாரதி அன்பர் வ.ராமசாமி இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை என்றும் ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சியை உத்தேசித்து தயவு செய்து தனித்தமிழை விட்டுவிடுங்கள். இந்தத் தமிழைப் பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல என்று யோசனை தெரிவித்திருக்கிறார். இந்த யோசனை ஏற்கும் மனநிலையில் ஜீவா அப்போது இல்லை. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தபோது ஜஸ்டிஸ் கட்சிக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதனால் ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்தார். அப்போது தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சுவாமி வேதாச்சலம் என்கிற மறைமலையடிகள் மீது ஜீவா மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.
1927-ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டிலும் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்ட ஜீவா மறைமலையடிகளைப் பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த பல்லாவரம் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு மறைமலையடிகள் வீட்டை அடைந்து அடிகளாரின் வீட்டுக் கதவைத்தட்டிய போது கேட்ட குரல் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேட்ட குரல் தனித் தமிழ் இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராகக் கருதப்பட்ட மறைமலையடிகளின் குரல். துரதிருஷ்டவசமாக அக்குரல் தனித் தமிழில் ஒலிக்கவில்லை.
யாரது போஸ்ட்மேனா? என்று தனித்தமிழ்; வித்தகர் கேட்ட கேள்வி ஜீவாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதைத் தொடரந்த மறைமலையடிகளுடனான விவாதத்தில் அவர் வடமொழி எதிர்ப்பாளாராக மட்டுமல்லாது ஆங்கிலத்தின் ஆதரவாளராகவும் இருப்பதையம் உணர்ந்திருக்கிறார் ஜீவா. பிற்காலத்தில் தன்னுடைய தலைமறைவு வாழ்வின் போது மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வரா சொன்னது போல மக்கள் மொழியில் பேச வேண்டும் என்பதை ஜீவா உணர்ந்தார். இதனைப் தாம் எழுதிய நூல்களிலும் ஜீவா பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவுடமைக் கட்சியில் இணைந்து பணியாற்றல்
ஜீவா பொதுவுடமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-ஆம் ஆண்டில் இருந்து 1939-ஆம் ஆண்டு வரையுள்ள காலகட்டமாகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரிட்டனின் ஏகாதிபத்திய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.
ஜீவா 1930-ஆம் ஆண்டுகளில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932-ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப் போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொருப்பினை வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. அதனை எதிர்த்துக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கு வகித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் ஜீவா மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிச வரலாறு, சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவத்தை வைத்துக் கொண்டு, தமிழில் அப்பொருண்மைகள் குறித்து எழுதினார்.
மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940-ஆம் ஆண்டுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கத்திலும் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் பல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார்.
சுயமரியாதைச் சமதர்மக் கட்சியை உருவாக்குதல்
ஈ.வெ.ராவோடு கருத்து முரண்பாடு ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜீவா அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937) எனலாம்.
1933-ஆம் ஆண்டில் ஜீவா எழுதிய “பெண்ணுரிமை கீதாஞ்சலி” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுவே ஜீவா எழுதிய முதல் நூல் ஆகும். அன்றிலிருந்து நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பல பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.
தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபடல்
1937-ஆம் ஆண்டில் கோவை லட்சுமி மில் போராட்டத்தைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் ஈஎம்எஸ் நம்பூதிரபாடு தலைமையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாட்டில் ஜீவா செங்கொடியினை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து 1938-ஆம் ஆண்டில் மதுரை பசுபதி மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜீவா கலந்து கொண்டு போராடியபோது ஜீவா கைது செய்யப்பட்டார். இத்தகைய போராட்டங்களால் ஜீவாவிற்குப் பல்வேறுவிதமாக துன்பங்கள் ஏற்படுகின்றன. ஜீவா காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சென்னை மாகாணத்திலிருந்தே வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து ஜீவா பம்பாய் சென்றார். ஆனால் அங்கும் அரசியல் காரணங்களுக்காக ஜீவா கைது செய்யப்பட்டார். இந்நிகழ்வைப் போன்று இருமுறை சென்னை மாகாணத்தை விட்டு ஜீவா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப்பின் தொடர்ச்சியான சிறைவாசங்களும் தலைமறைவு வாழ்க்கையும் ஜீவாவின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகின. இதற்கிடையில் 1937-ஆம் ஆண்டில் நவம்பர் 20-ஆம் தேதி ஜீவா பல இன்னல்களுக்கிடையில் ஜனசக்தி பத்திரிகையை துவங்கினார் .
1957-ஆம் ஆண்டில் டிசம்பரில் திருச்சியில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தமிழக பிரதிநிதிகளின் மாநாட்டைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி ஜீவா பேசிய பேருரையே ‘ஜாதி ஒழிப்பும் மொழிப்பிரச்னையும்’ என்ற நூல் ஆகும்.
சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ததலைவராகச் செயல்படுதல்
நாட்டின் சுதந்திரத்துக்குப்பின் ஒருமுறை சட்டசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜீவா. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து அவர் ஆற்றிய,
‘‘நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த ராஜ்யத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. கல்விக் கூடங்களிலும் ஆட்சி மன்றத்திலும் நியாய மன்றத்திலும் நிர்வாகத்துறையிலும் பிரதேச மொழியே இயங்கவேண்டும். ஆகவே வெகுசீக்கிரமாக தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க அரசியலார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் முதல் அடிப்படையான கொள்கை இதுதான். இப்படிச் செய்தால்தான் ஜனநாயகத்தின் முதல் வடிவம் சிருஷ்டிக்கப்படும். தமிழ் தெரிந்தால் போதும். இந்நாட்டின் ஆட்சியாளராகவும் ஆகலாம். உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆகலாம். கல்லூரிப்பேராசியராகவும் ஆகலாம்.’’
என்ற உரை மிகவும் புகழ்பெற்றது. இது ஜீவாவின் உண்மையான மொழிப்பற்றினைக் காட்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.
அதேபோன்று கம்பன் மீதும் பாரதி மீதும் ஜீவா கொண்டிருந்த பற்றினைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரையோ நூலோ எழுதலாம். திராவிட இயக்கங்கள் கம்பராமாயணத்தைக் கடுமையாகத் தாக்கி நூல்கள் எழுதி, அதில் உள்ள சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு விரசமான கட்டுரைகளும் தாக்குதல்களும் தொடர்ந்தபோது கம்பனில் பொதிந்துள்ள நயங்களை அந்த திராவிட இயக்கத்தவர்களின் கடுமையான தாக்குதல்களுக்கு எவ்வித அடிபணிதலும் இல்லாது தன்கருத்துக்களை முன்வைத்தவர் ஜீவா. குன்றக்குடி அடிகளாரும் ஜீவாவும் கலந்து கொண்ட பட்டிமண்டபங்கள் மிகவும் புகழ் பெற்றவையாக அமைந்து விளங்கின. ஜீவாவைக் ‘கம்பராமாயண உபன்யாசகர்’ என்று திராவிட கட்சிகள் கேலி செய்த அதே மேடையில் ஜீவா கம்பனை வியந்து பார்த்துக் கருத்துக்களை வெளியிட்டார் . தாமரை இதழ்களில் பாரதி பற்றி ஜீவா எழுதிய கட்டுரைகள் பாரதி ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளவை என்று சொல்லலாம்.
தன்னலம் கருதாத்தகைமையாளர்
தன்னலம் கருதாது என்றும் எப்பொழுதும் ஜீவா அவர்கள் நாட்டின் நலத்திற்காகவும், மக்களின் நலத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டே இருந்தார். ஜீவாவின் வாழ்வில் பல மறக்க இயலாத நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.
1963-ஆம் ஆண்டின் ஒரு நாள். சென்னையின் ஜனசக்தி அலுவலகத்தில் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தார் ஜீவா.
அப்பொழுது இளம்பெண்கள் இருவர் ஜனசக்தி அலுவலக வாயிலில் தயங்கித் தயங்கி நின்றனர். அவர்கள் உள்ளே இருந்தவரைப் பார்த்து,
‘‘ஜீவா இருக்கிறாரா? என்று ஒரு பெண் மெதுவாகக் கேட்கிறாள். உடனே இருவரும் ஜீவாவின் அறையில் அனுமதிக்கப்படுகின்றனர். இரு பெண்களும் ஜீவாவின் முன் தயங்கி அமர்கின்றனர். அவர்களைப் பார்த்து பரிவான குரலில் என்னம்மா வேண்டும் என்று கேட்கிறார் ஜீவா. உங்களைத்தான் பார்க்க வந்தோம் என்று ஒரு பெண் கூறினாள்.
பேசாமல் தயக்கத்துடன் இருந்த பெண்ணை நோக்கி நீ யாரம்மா என்று கேட்கிறார் ஜீவா.அந்தப் பெண் பதில் ஏதும் சொல்லவில்லை. ஏற்கனவே பேசிய பெண், நாங்கள் ஆசிரியப் பயிற்சி முடித்த மாணவிகள் என்கிறாள். மீண்டும் ஜீவா, ஒன்றும் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து நீ யாரம்மா? என்று கேட்டார்
கலங்கிய கண்களுடன் அப்பெண் ஒரு துண்டுக் காகிதத்தை ஜீவாவிடம் நீட்டினாள். அதில் – எனது தாத்தாவின் பெயர் குலசேகரதாஸ். எனது அன்னையின் பெயர் கண்ணம்மா என்று எழுதியிருந்தது. அந்த வாக்கியங்களை வாசித்த ஜீவா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார். ஜீவா அத்துண்டுக் காகிதத்தில் என் மகள் என்று எழுதி அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார்.
அந்த வார்த்தைகளைக் கண் கொட்டாமல் அந்தப் பெண் உணர்ச்சிகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எழுதிய அந்தத் துண்டுக் காகிதத்தை ஜீவா திரும்பக் கேட்டார். அப்பெண் அதைக் கொடுக்கவில்லை. என் மகள் என்று சொல்லவே கூசித்தானே தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாய் என்று மனந்திறந்து ஜீவா கேட்டு விட்டுவிட்டார்.
ஒரு புன்சிரிப்பினால் பதில் சொன்னாள் ஜீவாவின் மகளான அந்தக் குமுதா. ஜீவாவின் முதல் துணைவியார் திருமதி கண்ணம்மாவின் ஒரே பெண்.
கண்ணம்மாவின் தகப்பனார் குலசேகர தாஸ் கடலூரிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் சட்டசபை உறுப்பினர். குமுதாவைப் பெற்றெடுத்த சில நாட்களில் கண்ணம்மா தன் கண்களை மூடினர். அதன் பிறகு குமுதா தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தாள். அவர்களையே பெற்றோர் என்று எண்ணி அவள் வளர்ந்து வந்தாள். அந்தக் குமுதா தனது 17 வயது வாழ்க்கையைத் தன் தந்தையிடம் சொல்ல, அந்தத் தந்தை தமது 17 ஆண்டுக் கால வாழ்க்கையை, தான் நாடு கடத்தப்பட்டதை, தன் சிறைவாழ்வை, அரசியல், பொதுவாழ்வு போன்றவைகளில் தன்னையும் தன் வயதினையும் கரைத்துக் கொண்டதை தன் மகளுக்கு சொல்கிறார். பிறகு அந்த மகள் தந்தை இறக்கும் வரை அவருடன் சேர்ந்து குடிசையில் வசிக்கிறாள். இந்த நிகழ்ச்சி அனைவரையும் நெகிழவைக்கும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.
பொதுநலம் பேணிய புனிதர்.
ஜீவாவும், காமராஜரும் அன்பால் இணைந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர். ஜீவாவின் மீது காமராஜர் பெருமதிப்பு வைத்திருந்தார். முதல்வராக இருந்த காமராஜர் சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். அப்போது கட்சித்தொண்டர் ஒருவர் ஜீவா அந்தப் பகுதியில் வசிப்பதாகவும் அவர் மிகவும் உடல்நலம் குன்றி இருப்பதாகவும் கூற, காமராஜர் அவரை சந்திக்க பல குண்டு குழிகளையும் சாக்கடைகளையும் தாண்டி ஜீவா வசித்து வந்த குடிசைக்குச் செல்கிறார். அந்த குடிசையின் இழிந்த நிலை காமராஜரை திடுக்கிட வைக்கிறது. ஜீவாவின் பக்கத்தில் அமர்ந்து ”ஜீவா என்ன கஷ்டம் இது? முதல்வரின் கோட்டாவில் உனக்கு ஒரு அரசாங்க வீடு ஒதுக்கிக் கொடுக்கிறேன். அங்கு போய் நீ இரு” என்று காமராஜர் கூறினார்.
அதனைக் கேட்ட ஜீவா, ‘‘ தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் இருக்க வசதியாக அரசு வீடுகள் கிடைக்கட்டும். அன்று நான் நீங்கள் கொடுக்கும் வீட்டுக்குக் குடியேறுகிறேன்” என்றார்.
விரக்தியுடன் காமராஜர், ‘‘…ஜீவா நீ உருப்படமாட்டே..’’ என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார். தன்னலம் கருதாத் தகைமையாளராகவும், பொதுநலம் பேணிய புனிதராகவுமாக ஜீவா திகழ்ந்ததை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஜீவா அவர்கள் தமக்கு நெருங்கியவர் முதல்வராக இருந்தும் அவருடன் கொண்ட நட்பினைத் தவறாகப் பயன்படுத்தாமல் நேர்மையுடையவராகத் தூய்மைஉடையவராக வாழ்ந்தார்.
ஜீவாவின் நூல்கள்
தமிழகத்தின் சிறந்த மேடைப்பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும் கருதப்பட்ட ஜீவா ஆற்றிய சிந்தனை ஆழமிக்க சொற்பொழிவுகள் அப்போது காற்றில் கலந்த பேரோசைகளாகப் போய்விட்டன. அவர் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.
மதமும் மனித வாழ்வும், சோஷலிஸ்ட் தத்துவங்கள், புதுமைப்பெண், இலக்கியச்சுவை, சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள், மொழியைப் பற்றி, ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு, மேடையில் ஜீவா (தொகுப்பு), சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கலை இலக்கியத்தின் புதிய பார்வை, தேசத்தின் சொத்து (தொகுப்பு) ஆகியவை ஜீவா அவர்களின் மிகச் சிறந்த நூல்களாகும். இங்ஙனம் பல நூல்களை எழுதி தமிழ் வளர்த்த செம்மலராக ஜீவா திகழ்ந்தார்.
கலைஇலக்கிய பெருமன்றம் உருவாக்கல்
ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது 1961-ஆம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்ட ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ ஆகும். பொதுவுடமைக் கொள்கையைப் பரப்ப “ஜனசக்தி” நாளிதழைத் தொடங்கிய ஜீவா, “தாமரை” என்ற இலக்கிய இதழை 1959 –ஆம் ஆண்டில் தொடங்கினார்.
இங்ஙனம் ஜீவா அடித்தளமிட்டு உருவாக்கிய கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கமானது இன்று கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று இலக்கிய இயக்கத்தையும், அமைப்பையும் தோற்றுவித்துள்ளது நோக்கத்தக்கது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அயராது பாடுபட்டு மாவீரராகவும், தமிழ் வளர்த்த செம்மலராகவும் திகழ்ந்த ஜீவா அவர்கள், 1963-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 18-ஆம் நாள் இயற்கை எய்தினார்.
ஜீவாவின் மறைவு உழைக்கும் பாட்டாளி வர்க்க மக்களுக்கும், பாரத நாட்டிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். ஜீவாவின் இறுதிச் சடங்கின்போது நாடகக் கலைஞர் டிகே சண்முகம் அவர்கள் சென்னை இடுகாட்டில்,
‘‘காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா’’
என்ற ஜீவாவின் பாடலைப் பாடிய போது அனைவரும் கண்ணீர் உகுத்தனர். பாரதத்தின் சொத்தாகத் திகழ்ந்த ஜீவா அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனதை விட்டு என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

முதலாளித்துவ அமைப்பின் கையாலாகாத் தனமும் சோஷலிச அமைப்பின் உறுதியும்


சமதர்மம் ஆளும் கியூபா நாட்டில்
அமெரிக்கச் சதியால் வளங்குறை இருப்பினும்
வேலை யில்லா நிலைமை இல்லை
நோய்குணப் படுத்தக் கட்டணம் இல்லை
சீற்றம் கொண்ட காற்றின் முன்னால்
ஆற்றல் கொண்ட அமெரிக்க அரசு
கோழையாய் மக்களைக் காவு கொடுக்க
ஏழை எனினும் கியூபா அரசு
வளர்ப்புப் பிராணியும் சாகாது காத்தது
தளரா சமதர்ம அறமென அறிவீர்
(சோஷலிசம் ஆளும் கியூபா நாட்டின் மீது (வல்லரசான) அமெரிக்கா (பொருளாதாரத் தடை என்ற பெயரில்) செய்யும் சதிச் செயல்களால், அந்நாடு வளத்தில் குன்றி இருந்தாலும், அங்கு வேலை இல்லாத் திண்டாட்டம் இல்லை; (மக்களுக்கு ஏற்படும்) நோய்களைக் குணப்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. சீற்றத்துடன் புயல் காற்று வீசிய பொழுது ஆற்றல் மிக்கதாக நினைக்கப்படும் அமெரிக்க அரசு ஒரு கோழையைப் போல் தன் மக்களில் பலரைக் காவு கொடுத்தது. (இது முதலாளித்துவ அமைப்பின் கையாலாகாத் தனம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்) ஏழ்மையில் இருந்தாலும் கியூபா அரசு தன் மக்களை மட்டுமல்லாமல் அவர்களுடைய வளர்ப்பப் பிராணிகளிலும் ஒரு உயிரைக் கூட, காவு கொடுக்காமல் காத்தது, உறுதியான சோஷலிச அமைப்பின்அறத்தினால் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.)
- இராமியா

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-5 (உபரி மதிப்பு கோட்பாடு)


இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது


நம்முடைய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்
இதில் இரண்டு வழி முறைகள் உள்ளன, முதலாளித்துவ வழிமுறை, மார்க்சிய வழிமுறை
முதலில் முதலாளித்துவ வழிமுறையைப் பார்ப்போம்

நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
கூலி (12 மணிநேர உழைப்புக்கு) = 100 ரூபாய்

இவற்றில் நிலம், கட்டிடம், இயந்திரம் ஆகியவை நிலைத்த மூலதனம் என்றும், மின்சார செலவு, மூலப் பொருள், கூலி ஆகியவை சுற்றோட்ட மூலதனம் என்றும் பிரிக்கப்படுகிறது.

உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மொத்த மூலதனம்) X 100
8 மணிநேர உழைபுக்கு 100 ரூபாய் கூலி என்றால், 12 மணிநேரத்துக்கு 150 ரூபாய் ஆகும்.

எனவே உபரி உழைப்பின் மதிப்பு 50 ரூபாய் ஆகிறது.
உபரி மதிப்பின் வீதம் = (50/230)X100 = 21.73% ~ 20% ஆகிறது.
முதலாளித்துவ சமூகம் உபரிமதிப்பை இப்படிதான் கணக்கிடுகிறது.

ஆனால் மார்க்ஸ் இது தவறு என்று நிரூபிக்கிறார்: எப்படி

மார்க்சிய வழிமுறை

உபரி மதிப்பை கணக்கிடும் போது எந்த மூலதனம் உபரியை தருகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மொத்த மூலதனத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதாவது மார்க்ஸ் மூலதனத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்

நிலம், கட்டிடம், இயந்திரம், மின்சார செலவு, மூலப்பொருள் இவை எல்லாம் உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை என்பதால் இவை மாறா மூலதனம் எனப்படுகிறது.

கூலி மட்டுமே உபரி மதிப்பைத் தோற்றுவிப்பதால், அது மட்டுமே மாறும் மூலதனம் ஆகும். இதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மாறும் மூலதனம்) X 100
உபரி மதிப்பின் வீதம் = (50 / 100) X 100 = 50%

எனவே முதலாளித்துவ அறிஞர்கள் சொல்வது போல, உபரி மதிப்பின் வீதம் 20% அல்ல, அது 50% என்பதை மார்க்ஸ் நிரூபிக்கிறார்.

8 மணிநேர உழைப்புக்கான கூலியை பெற்றுக் கொண்டு ஒரு தொழிலாளி 12 மணிநேரம் உழைக்கிறார். கூடுதலான அந்த 4 மணிநேர உழைப்பின் மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்கிறார். ஏன்,

உற்பத்திசாதனங்கள் (நிலம், கட்டிடம், இயந்திரம்) எல்லாம் முதலாளிக்கு சொந்தமாக இருக்கிறது.
தொழிலாளிக்கு தன்னுடைய உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவுமே சொந்தமாக இல்லை.
இதனாலேயே, உபரி மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்வது என்பது நியாயப்படுத்தப்படுகிறது. இயந்திரம், கட்டிடம் எல்லாம் வானத்தில் இருந்து வந்தவை அல்ல, அதுவும் தொழிலாளர்களின் உழைப்புதான். இதைதான் மார்க்ஸ் இறந்த கால உழைப்பின் மீது நிகழ்கால உழைப்பு வினை புரிகிறது என்றார்.

(உற்பத்தி சாதனங்கள் எல்லாம் ஒரு தனி மனிதனுக்கு எப்படி சொந்தமானது என்பது தனி வரலாறு.)

நம்முடைய உதாரணத்தில் 270 ரூபாய் மதிப்புக்கொண்ட நூலை 230 ரூபாய்க்கே தயாரித்துவிடுகிறார் அந்த முதலாளி. அதில் 50 ரூபாய் உபரிமதிப்பு என்று ஆகிறது.
250 ரூபாய்க்கு மொத்த வியாபாரியிடம் விற்று 30 ரூபாயை தான் எடுத்துக்கொள்கிறார்.
மொத்தவியாபாரி, 260 ரூபாய்க்கு சில்லறைவியாபாரியிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார்.

சில்லறைவியாபாரி, அதன் உண்மை மதிப்பான 270 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார்.
இப்படியாக ஒரு தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட உபரிமதிப்பை, இந்த சமூகம் பலவாறாக தனக்குள் பிரித்துக்கொள்கிறது.

இவ்ளோதாங்க உபரி மதிப்புக் கோட்பாடுங்கறது.

இப்பொழுது மூலதனம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
50 ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக்கொண்ட அந்த முதலாளி, அதில் 20 ரூபாயை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி 10 ரூபாயை தன்னுடைய தொழில் விருத்திக்காக பயன்படுத்துகிறார் என்றால்
அந்த 10 ரூபாய் தான் மூலதனம் எனப்படும்.
உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த பகுதியே மூலதனம் எனப்படும்.

மூலதனம் உபரிமதிப்பை தோற்றுவிக்கும்,
உபரி மதிப்பு மூலதனத்தை பெருக்கமடைய செய்யும்.

மூலதனமும், உபரிமதிப்பும், இரண்டு எதிர் எதிர் கூறுகள் (இயங்கியலின் முதல் விதியான ‘எதிர்கூறுகளின் ஒற்றுமையும், போராட்டமும்’ என்ற விதியை இங்கு நினைகூர்க)

கூலியையும், உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளியும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டார்கள்.

பிரச்சனையின் தீர்வாக, இருவரும் அதை (கூலியயும், உபரி மதிப்பையும்) நியாயமான முறையில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் கூறினார்கள்.

முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில் கண்டார்களோ, அதே இடத்தில்தான் பிரச்சனையின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிரூபித்தார்.

முலதனத்துக்கும், உபரி மதிப்புக்கும் உள்ள இந்த முரண்பாட்டால், முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் அளவு மாற்றம் எப்படி இருக்கும் என்பதை இனி பார்க்கலாம்.

முதலாளி உபரி மதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்றுதான் அனுதினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.
அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.
1. கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
2. அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது

கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளின் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது. தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.

உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு, அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.

எனவே முதலாளிகள் இரண்டாவது வழியை பின்பற்ற ஆரம்பித்தார்கள்

அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.
நம்முடைய உதாரணத்தில் அவசியமான உழைப்பு நேரம் 8 மனி நேரம் என்று பார்த்தோம். அதாவது 230 ரூபய் மதிப்பிலான ஒரு பொருள் 8 மணி நேரத்தில் தயாரிக்கப்படுகிறது. புதிய தொழில் நுட்பத்தின் காரணமாக அதே 230 ரூபய் மதிப்பிலான பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
என்ன ஆகும்?

இன்னொரு 4 மணி நேர உழைப்பு உபரி உழைப்பு என்றாகிறது.
ஒரு நாளின் 12 மணி நேர வேலை நாளில் முதலில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்றும், உபரி உழைப்பின் நேரம் 4 மணி நேரம் என்றும் இருந்தது,

இப்பொழுது அவசியமான உழைப்பு நேரம் 4 மணி நேரம் என்றும், உபரி உழைப்பின் நேரம் 8 மணி நேரம் என்றும் ஆகிறது.

ஒரு பொருளின் மதிப்பு உழைப்பின் கால அளவை பொருத்தது என்று ஏற்கனவே பார்த்தோம்.
8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும். எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள். தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள். எல்லா முதலாளிகளும் அந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால், அந்த பொருளின் மதிப்பும் குறைந்துவிடும், பிறகு மீண்டும் வேறொரு தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு முதலாளிகள் தள்ளப்படுவார்கள்.

எனவே முதலாளித்துவம், சுய லாபத்திற்காக தொழில் நுட்ப வளர்சியை துரிதப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது,

எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலேயும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறுவதற்கு காரணம் இதுதான்.

தொழில்நுட்பம் வளர வளர உபரி மதிப்பும் அதிகமாகிறது, எனவே மூலதனமும் அதிகமாகிறது.

மூதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது. எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒருசில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெரு முதலாளிகள் ஆகின்றனர், தோற்கடிக்கப்பட்ட முதலாளி பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து விடுகிறார்.

பாட்டாளிகள் பெருக பெருக அவர்கள் அமைப்பு ரீதியில் அணிதிரண்டு புரட்சி செய்யும் போது, சமூக மாற்றம் ஏற்படும், அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.

 நன்றி : http://vizhivendhan.blogspot.in

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-4 (உபரி மதிப்பு கோட்பாடு)



ஒரு தொழிற்சாலை தொடங்க என்னென்ன தேவைப்படும்

1. நிலம், கட்டிடம்
2. இயந்திரங்கள்
3. மூலப் பொருள்
4. மின்சாரம் இன்ன பிற
5. தொழிலாளி

இந்த ஐந்தும் இருந்தால்தான் ஒரு தொழிலை தொடங்க முடியும்

உதாரணத்திற்கு இங்கு நாம் பஞ்சிலிருந்து நூல் நூற்கும் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைவோம்.

M1 - C1 - P - C2 - M2

இதில் M1 (Money) என்பது
ஒரு முதலாளி நிலம் / கட்டிடம், இயந்திரங்கள், மின்சாரம், தொழிலாளி இவற்றிற்க்காக செலவிடும் தொகை எனலாம்.

C1 (Commodity) என்பது மூலபொருளாகிய பஞ்சு
P (Process) என்பது உற்பத்தியைக் குறிக்கும்
உற்பத்திக்கு பிறகு மூலப்பொருள் உறுமாற்றம் (C2) அடைகிறது. கூடவே அதன் மதிப்பும் (M2) உயருகிறது.
M2 - M1 = m
இங்கு m என்பது உபரிமதிப்பு எனப்படும்.

இந்த உபரி மதிப்பு எப்படி உற்பத்தியாகிறது.
இயந்திரங்கள் உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறதா?

நிச்சயமாக இல்லை, ஒரு இயந்திரத்தின் மதிப்பு 10000 ரூபாயும், அதன் வாழ்நாள் 1000 நாளும் என்றால், அந்த இயந்திரம் ஒவ்வொருநாளும் 10 ரூபாய் மதிப்பை மட்டுமே பஞ்சிலிருந்து நூலுக்கு பெயர்க்கும். அதை காட்டிலும் அது அதிகமாக (உபரியாக) ஒரு ரூபயைக்கூட கொடுக்காது.

நிலம், கட்டிடம், மினசாரம் ஆகியவைகளும் அப்படிதான், அதன் மதிப்பை அப்படியே உற்பத்திப் பொருளுக்கு பெயர்க்குமே தவிர உபரியாக (கூடுதலாக) ஒரு ரூபாயைக் கூட பெயர்க்காது.

சரி, மூலப்பொருளினால் உபரிமதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு மூட்டை பஞ்சின் விலை 100 ரூபாய் என்றால், மூலப்பொருள் உறபத்தியாளரிடமிருந்து நாம் அதை 100 ரூபாய் கொடுத்துதான் வாங்கியிருப்போம். ஒரு வேளை நாம் அதை அவரிடம் பேரம் பேசி 90 ரூபாய்க்கே வாங்கினால், 10 ரூபாய் லாபம் வந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். உண்மையில் அந்த பத்து ரூபாய் என்பது அவர் அடைந்த நஷ்டம் தானே ஒழிய வேறில்லை, அவரின் நஷ்டம் இவருக்கு லாபம் என்றாகிறதே ஒழிய, அது உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை.

மீதி இருப்பது தொழிலாளியின் உழைப்பு ஒன்றுதான். அது மட்டும்தான் உபரியை தோற்றுவிக்க முடியும், அது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் விலை மற்றும் கூலி ஆகியவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

விலை என்றால் என்ன?
ஒரு பண்டத்தின் மதிப்பை பணதொகையின் மூலமாக சொல்வதுதான் விலை எனப்படும்.
விலையை எப்படி நிர்ணயிப்பது?
அந்த பண்டத்தை செய்வதற்கு ஆகும் செலவுதான், அதன் விலை எனப்படும்.
நம்முடைய உதாரணத்தில்
நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
உழைப்பு சக்த்தியின் மதிப்பு (கூலி) = 100 ரூபாய்
மொத்தம் = 230 ரூபாய்
எனவே 100 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு மூட்டை பஞ்சானது, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது 230 ரூபாய் மதிப்பு கொண்ட நூல் என்ற இன்னொரு பண்டமாகிறது.
அந்த நூலின் விலை 230 ரூபாய் ஆகும். அதன் மீது கூடுதலாக ஏற்றப்பட்ட மதிப்பு 130 ரூபாய் ஆகிறது. இப்பொழுது முதலாளி அந்த நூலை விற்பனை செய்ய வேண்டும். அவர் அதை 230 ரூபாய்க்கே விற்கிறார் என்றால், அவருக்கு துளியும் லாபம் கிடைக்காது. எனவே அதை அவர் 230 ரூபாயை விட குறைவான செலவிலேயே உற்பத்தி செய்ய முற்படவேண்டும்.

கூலி என்றால் என்ன?
ஒரு பண்டத்தின் விலை என்பது, அதை உற்பத்தி செய்ய ஆகும் செலவவுக்கு சமம் என்பதைப் போலவே, தொழிலாளியின் குறிப்பிட்ட மணிநேர உழைப்புக்கு கொடுக்கும் கூலியானது, அதை அந்த தொழிலாளி மறு உருவாக்கம் செய்து கொள்ளும் செலவுக்கு சமம் ஆகிறது.
அதாவது ஒரு தொழிலாளி உண்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம், தனக்கு பிறகு இன்னொரு தொழலாளியை உருவாகும் விதமாக தன் குடும்பத்தை பராமரிக்க ஆகும் செலவு, என்ற இவற்றின் மொத்த தொகையையே கூலியாக பெறுகிறார்.

உண்மையான கூலி என்றால் என்ன?
முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பண்டமானது சந்தையில் விற்பனைக்கு வருவது போலவே, தொழிலாளியின் உழைப்பு சக்த்தியும் ஒரு பண்டமாக விற்பனைக்கு வருகிறது. அதை முதலாளிகள் வாங்க முற்படுகிறார்கள்.
8 மணிநேர (ஏன் 8 மணி நேரம் என்பதை பிறகு விளக்குகிறேன்) உழைப்புக்கு 100 ரூபாய் கூலி என்று ஒப்பந்தம் போட்டு வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், முடிவில், முதலாளிக்கு ஒரு பைசாவும் லாபமாக கிடைக்காது. எனவே, இதைக் கருத்தில் கொண்டே முதலாளிகள் தொழிலாளர்களிடம் முதலிலேயே 12 மணிநேரத்தை வேலைநேரமாக சொல்லி விடுகிறார்கள்.
எனவே, 8 மணிநேரத்திற்கான கூலியாக தொழிலாளி 100 ரூபாயைப் பெற்று கொள்கிறான், ஆனால், முதலாளிக்காக மேலும் 4 மணி நேரம் கூடுதலக வேலை செய்கிறான். அந்த நேரத்தில் உற்பத்தியாகும் மதிப்புதான் உபரி மதிப்பு ஆகும்.

நிலம், கட்டிடம், இயந்திரம், மூலப்பொருள் இவையெல்லாம் உபரியை தோற்றுவிக்காது என்பதால், அவர் ஒரு தொழிலாளியிடம் இருந்துதான் இதை அபகரிக்க முடியும்.
நரம்பும், சதையையும் கொண்ட ஒரு தொழிலாளியால்தான், உபரிமதிப்பைத் தோற்றுவிக்க முடியும்.

எனவே ஒரு தொழிலாளியின் உழைப்பு நேரத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. அவசியமான உழைப்பு நேரம் (இதன் மதிப்பை தொழிலாளி கூலியாக பெற்று விடுகிறார்)
2. உபரி உழைப்பு நேரம் (இதன் மதிப்பை முதலாளி அபகரித்துக் கொள்கிறார்)

இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது

 நன்றி : http://vizhivendhan.blogspot.in

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-3 (உபரி மதிப்பு கோட்பாடு)



மார்க்சிய பொருளியல்
இதில் உபரி மதிப்பு கோட்பாடு குறித்து விளக்கப்படுகிறது

பொருளாதாரத்தின் அடிப்படைகளாக முதலில் நாம் பார்க்க வேண்டியது இவைதான்
1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
2. மதிப்பு
1. பயன் மதிப்பு என்றால் என்ன?
2. பரிவர்த்தனை மதிப்பு என்றால் என்ன?
3. மதிப்பு என்றால் என்ன?
3. பணம் என்றால் என்ன?
4. லாபம் என்றால் என்ன?
5. உபரி மதிப்பு என்றால் என்ன?

ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு எனப்படுவது போல,

ஒரு உயிரின் அடிப்படை அலகு செல் எனப்படுவது போல,

பொருளாதாரத்தின் அடிப்படை அலகு பண்டம் அல்லது சரக்கு (commodity) எனப்படும்.

1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
நாம் நம்முடைய வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து நாமே பயன்படுத்திக் கொண்டால் அந்த தண்ணீர் ஒரு பொருள்தான். ஆனால் அதையே ஒரு பாட்டிலில் அடைத்து சந்தையில் வைத்து விற்றால், அது பண்டம் ஆகிறது

விற்பதற்க்காகவே உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சரக்கு எனப்படும்.

சரக்கு என்பது மதிப்புகளை கொன்டது.
1. பயன் மதிப்பு
2. பரிவர்த்தனை மதிப்பு
3. மதிப்பு

பயன் மதிப்பு:
தண்ணீர் குடிக்க பயன்படுகிறது, புத்தகம் படிக்க பயன்படுகிறது, பேனா எழுத பயன்படுகிறது. இவ்வாறு ஒரு பண்டம் அதன் பயன்பாட்டைப் பொருத்து மதிப்பிடப்படுவது பயன் மதிப்பு எனப்படும்.
பயன்பாடு அல்லாத ஒரு பொருள் பண்டமாவதில்லை.

பரிவர்த்தனை மதிப்பு:
இது சந்தையில் தேவை மற்றும் அளிப்பு (demand and supply) விதியைப் பொருத்து மாறுபடும்.
மக்களுக்கு தேவை (demand) அதிகமாக இருந்தால் அந்த பண்டத்தின் மதிப்பு அதிகரிக்கும். சந்தையில் அளிப்பு (supply) அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு குறையும், இதுவே சந்தைகான பொது விதி. (ஆனால் ஒவ்வொரு பண்டமும் அதன் உண்மையான மதிப்புக்குதான் விற்கப்படுகிறது என்பதை பிறகு பார்க்கலாம்)

மதிப்பு:
பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு அல்லாமல் ஒவ்வொரு பண்டத்திற்கும் உண்மையான மதிப்பு என்று ஒன்று உண்டு,

தங்கத்தின் மதிப்பு ஏன் அதிகமாக இருக்கிறது, செங்கல்லின் மதிப்பு ஏன் குறைவாக இருக்கிறது,
பயன்பாட்டை பொருத்து மதிப்பு அதிகரிக்குமா என்றால், இல்லை, ஏனெனில், தங்கத்தின் பயன்பாட்டை விட தண்ணீரின் பயன்பாடுதான் அதிகம், பயன்பாட்டை பொருத்து என்றால் தண்ணீரின் விலைதான் தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை.

உண்மையில், ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பது என்றால், அதன் மீது செலவிடப்பட்ட மனித உழைப்பைக் கொண்டுதான் நிர்ணயிக்க வேண்டும்.

அதன்படி தங்கத்தின் மிது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு அதிகம். ஆனால் செங்கல்லின் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு குறைவு. எனவேதான் தங்கத்தின் மதிப்பு என்பது தண்ணீரின் மதிப்பை விட அதிகமாக உள்ளது.

ஒருவேளை நாளை யாராவது, புதிய ரசவாதத்தால் செங்கல்லை தங்கமாக மாற்றுகிறார் என்றால், என்ன ஆகும், தங்கத்தின் மதிப்பு செங்கல்லின் மதிப்புக்கு இறங்கிவிடும்.
எனவே ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது அதன் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவைப் பொருத்தது.

சரி, உழைப்பின் அளவை எப்படி நிர்ணயிப்பது?

உழைப்பின் அளவு என்பது அதன் கால அளவை பொருத்தது. அதாவது, அந்த பண்டத்தை தயாரிப்பதற்காக ஆகும் நேரத்தை பொருத்தது.

ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது தனியானதல்ல, அது ஒரு ஒப்பீட்டு வடிவம் ஆகும். அதாவது, ஒரு புத்தகம் செய்வதற்கு 2மணிநேரம் ஆகிறது என்றால், இதை மட்டும் வைத்துக் கொண்டு அதை மதிப்பிட முடியாது. ஒரு பேனா செய்வதற்கு 1மணிநேரம் ஆகிறது என்றால் இப்பொழுது, ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் எனலாம். இதுதான் ஒப்பீட்டு வடிவம் என்பது. மதிப்பை இப்படித்தான் நாம் அளவிட முடியும்.

3. பணம்
மதிப்பு என்பது ஒரு ஒப்பீட்டு வடிவம் என்று பார்த்தோம். ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் என்றால், இரண்டிலும் சம அளவிலான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இதை வேறு விதமாக சொல்வதென்றால், இரண்டு மனிநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் எனலாம். இவற்றை பரிமாறிகொள்ளும் போது பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு பண்டம் தேவைப்பட்டது.

அதாவது 1புத்தகம் = 2பேனா = அரை கிராம் தங்கம் (உதாரணத்திற்கு) என்றால் இங்கு அரைகிராம் தங்கம் பணமாக கொள்ளப்படுகிறது. இது நாமாக ஏற்படுத்திகொண்ட அமைப்புதானே ஒழிய தங்கம் தான் பணமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதையெதையோ வைத்துப் பார்த்து இறுதியாக தங்கத்தை பணமாக வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
எனவே பணம் என்பது பண்ட பரிமாற்றத்திற்கான ஒரு விசேஷ பண்டம்தானே ஒழிய வேறில்லை.
பணம் என்பது முதலாளித்துவ சமுதாயத்தில் தோன்றிய பண்டம் அல்ல, பணம் அடிமை சமுதாயத்திலேயே தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
இந்த பணம்தான் முதலாளித்துவ சமூதாயத்தில் எப்படி மூலதனமாகி ஆட்டிப் படைக்கிறது என்று இனிமேல் பார்க்க இருக்கிறோம்.

4. லாபம்
சமநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் என்றால், இதில் லாபம் என்பது எங்கிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும் அல்லவா?
ஒரு வியாபாரி ஒரு பண்டத்தை வாங்கி அப்படியே இன்னொருவரிடம் விற்கிறார் என்றால் அவருக்கு லாபம் எப்படி வருகிறது?

உதாரணமாக:
உண்மையில் ஒரு சில்லறை வியாபாரி 100 ரூபாய் மதிப்பிலான ஒரு பண்டத்தை 90 ரூபாய்க்கே வாங்கி விடுகிறார். அதை 100 ரூபாய் என்று நுகர்வோரிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.

ஒரு மொத்த வியாபாரியும் 100 ரூபாய் மதிப்பிலான அதே பண்டத்தை 80 ரூபாய்க்கே வாங்கி 90 ரூபாய் என்று சில்லறை வியாபாரியிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இதேபோல் ஒரு முதலாளி 100 ரூபாய் மதிப்பிலான அந்த பண்டத்தை, 60 ரூபாய்க்கே தயாரித்து விடுகிறார், அதை 80 ரூபாய்க்கு விற்று 20 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?

முதலாளி ---- மொத்த வியாபாரி ---- சில்லறை வியாபாரி ---- நுகர்வோர்

இந்த தொடர் வரிசையில் பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்கே சென்று ஆய்வு செய்தால் மட்டுமே அதன் புதிரை விடுவிக்க முடியும்.

எனவே மார்க்சிய ஆர்வலர்களாகிய உங்களுடன் சேர்ந்து ஒரு பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்குள் நுழைவோம் வாருங்கள்,

மாரிக்சியம் என்றால் என்ன? பகுதி-2 (வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்)



இயக்கவியல் பொருள் முதல் வாதம்: 

பொருள்களில் ஏன் மாற்றம் வருகிறது? 

இதற்கு இயக்கவியலை சற்று புரிந்து கொள்வது அவசியம்.

இயக்கவியலில் மூன்று முக்கியமான விதிகள் உண்டு 

1. எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும். 
2. அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல்.
3. நிலை மறுப்பின் நிலை மறுப்பு. 

இந்த மூன்று விதிகளும், 


1. இயற்கை 

2. மனித சமுகம் 
3. மனித சிந்தனை 
மூன்றிற்கும் பொருந்தும்.

எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்


அண்டத்தில் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன, அந்த மாற்றத்திற்கு காரணம் அதன் உள் முரண்பாடுகளே. முரண்பாடுகளின் இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று எதிர்க்கும், ஆனால் ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.


இயற்கையில், பகல் – இரவு, வெப்பம் – குளிர்

மனித சமூகத்தில், உற்பத்தி சாதனங்களும் – உற்பத்தி உறவுகளும்
மனித சிந்தனையில், நனவு மனம் – நனவிலி மனம்

அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல் 


எல்லாவற்றிலும் ஏற்படும் அளவு மாற்றம் வெளிப்படையாக தெரியாது, அளவு மாற்றத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் அது பண்பு மாற்றமாக மாறும்.


இயற்கையில், niiநீரை கொதிக்க வைக்கும் போது அதன் வெப்பநிலையில் ஏற்படுவது அளவு மாற்றம், 100 டிகிரியை தொட்டதும் நீர் ஆவியாவது பண்பு மாற்றம்.

மனித சமூகத்தில், அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் முதலாளித்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது.
மனித சிந்தனையில், ஒரு செயலை சிந்தித்துக் கொண்டே (அளவு மாற்றம்) ஒரு கட்டத்தில் அதற்கான செயலில் ஈடுபடுவது. (பண்பு மாற்றம்)

நிலை மறுப்பின் நிலை மறுப்பு. 


மாற்றத்தின் போது, எல்லாவற்றிலும் பழைய நிலையில் Uஉள்ள தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது. 


இயற்கையில், விதையில் இருந்து செடி வரும்போது விதையில் இருந்து உயிர்த்தன்மையை எடுத்துக் கொண்டு விதையின் ஓடுகள் விலக்கப்படுகின்றன.

மனித சமூகத்தில், ஒரு சமூகத்தில் இருந்து மற்றொரு சமூகம் வரும்போது பழைய சமூகத்தின் தொழில் நுட்பங்களை எடுத்துக்கொண்டு அதன் உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
மனித சிந்தனையில், தேவையானவற்றை மட்டும் கொண்டு மற்றவற்றை புறக்கனிப்பது.

இயக்கவியலின் கருத்தினங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

1. தனியானதும், சிறப்பானதும், பொதுவானதும். 
2. காரணமும் விளைவும். 
3. இன்றியமயாமையும் தற்செயலும். 
4. சாத்தியமும் எதார்த்ததும். 
5. உள்ளடக்கமும் வடிவமும். 
6. சாராம்சமும் நிகழ்வும். 
இவை அனத்தும் இயக்கவியலின் கருத்தினங்கள் எனப்படும். ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. தனியானதும், சிறப்பானதும், பொதுவானதும்
அனைத்து அம்சங்களும் ஒன்றாக உள்ள இரண்டு பொருளோ, நிகழ்வோ இந்த உலகத்தில் இல்லை. அதே சமயத்தில், உலகத்தில் உள்ள எல்லா பொருள்களிலும், நிகழ்வுகளிலும் நிச்சயமாக பொதுவான அம்சம் என்றும் ஏதாவது இருக்கும். உதாரணமாக, இரும்பை எடுத்துக் கொள்வோம், உயிரற்ற பொருள் என்ற அடிப்படியில் அது பொதுவானது. உலோகம் என்ற முறையில் அது சிறப்பானது. இரும்பு என்ற முறையில் அது தனியானது. தனியானது, சிற்ப்பானது, பொதுவானது இவை ஒன்றுக்கொண்று பிரிக்க முடியாதது

2. காரணமும் விளைவும்

ஒரு நிகழ்வு இன்னொரு நிகழ்வுக்கு இட்டுச் சென்றால், 
அந்த முதல் நிகழ்வு காரணம் எனப்படும் இரண்டாவது நிகழ்வு விளைவு ஆகும்.

காரணம் இல்லாமல் விளைவுகள் இருக்கவே முடியாது


3. இன்றியமையாமையும் தற்செயலும்

ஒரு நிகழ்வின் உள்ளார்ந்த செயல் இன்றயமையாதது,
வெளிப்புற தாக்கம் தற்செயல் ஆகும்.

உ.ம்: ஒரு முதலாளி ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துவது இன்றியமையாதது,

ஆனால் அவர் யாரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது தற்செயலானது

4. சாத்தியமும் எதார்த்தமும்

தகுந்த நிலைமகளில் நடைபெறக்கூடியது சாத்தியம் எனப்படும்.
ஏற்கனவே நடைபெற்றிருப்பது எதார்த்தம் எனப்படும்.

எதார்த்தத்தை நிறைவேற்றப் பட்ட சாத்தியம் என்றும். 

சாத்தியத்தை எதிர்கால எதார்த்தம் என்றும் சொல்லலாம்.

5.உள்ளடக்கமும் வடிவமும்

வடிவமும் உள்ளடக்கமும் பிரிக்கப்பட முடியாதவை.
உள்ளடக்கம் வடிவத்தை நிர்ணயிக்கிறது.

முதலில் உள்ளடக்கம் மாறுகிறது, பிறகு அது அதற்கேற்ற வடிவத்தை பெறுகிறது.

புதிய வடிவம் உள்ளடக்கத்தை மாற்றுகிறது.

6. சாராம்சமும் நிகழ்வும்

ஒரு பொருளின் ஒட்டு மொத்த இயல்பும் சாராம்சம் எனப்படும்.
நிகழ்வு என்பது அதனால் ஏற்படும் வெளிப்பாடு ஆகும்.

லெனின் சாராம்சத்துக்கும், நிகழ்வுக்கும் இடையே உள்ள உறவை ஒரு ஆழமான வேகமான நீரோட்டத்துக்கு ஒப்பிட்டார்.

அதன் ஆழத்தையும் வேகத்தையும், கண்களுக்கு தெரிகின்ற அலைகளையும், நுரைகளையும் கொண்டுதான் மதிப்பிட முடியும் என்றார்.


வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்: 


இயங்கியலின் கோட்பாடுகளை


இயற்கைக்கு பொருத்திப்பார்ப்பது - டார்வினியம்

சிந்தனைக்கு பொருத்திப்பார்ப்பது - பிராய்டியம்
மனித சமூகத்துக்கு பொருத்திப்பார்ப்பது - மார்க்சியம்

இங்கு நாம் மார்க்சியம் பற்றி பேசுவதால் அதைப் பற்றி மட்டும் எடுத்துக் கொள்வோம்.

மனித சமூகம் எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?
அதன் திசை வழியை நாம் அறிய முடியுமா?
முடியும் என்கிறது மார்க்சியம்.

இன்று உலகம் முழுவதும் பெரும்பாலும் முதலாளித்துவ சமூகம் உள்ளது,

ஆனால் ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் மன்னராட்சிதான் நடைபெற்றது
எப்படி இது மாறியது?
தனிப்பட்ட மனிதர்களது வீரதீர செயலாலா? 
உயர்ந்த தத்துவங்களினாலா?
இல்லவே இல்லை...

இவற்றிற்கெல்லாம் முன்பு மனிதன் என்பவனுக்கு 

உண்ண உண்வு வேண்டும், உடுக்க உடை வேண்டும், இருக்க இடம் வேண்டும்
இவற்றிற்காக உற்பத்தியில் ஈடுபட வேண்டும். (இந்த உண்மை மிக எளிமையானது, ஆனால் புரிந்து கொள்ளப்படாதது.)

எனவே உற்பத்திமுறைதான் சமூகத்தின் வடிவத்தை தீர்மானிக்கிறது...

ஒவ்வொரு சமூகத்தின் உற்பத்தி முறையையும் ஆய்வு செய்தால், அந்த சமூகத்தின் வடிவத்தை புரிந்துகொள்ளலாம்


இயக்க விதிகளை மனித சமூக வரலாற்றுக்கு பொருத்தி பார்ப்பதுதான், வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் எனப்படும். 


இதற்கு மார்க்ஸ் எடுத்துக் கொண்ட சமூக வரலாறு, 

ஐரோப்பிய சமூக வரலாறு
1. ஆதி பொதுவுடைமை சமூகம்
2. அடிமைச் சமூகம்
3. நிலபிரபுத்துவ சமூகம் 
4. முதலாளித்துவ சமூகம்

இந்த நான்கு சமூகமும் இயக்கவிதிகளுக்கு உட்பட்டு ஒன்றிலிருந்து ஒன்று மாறி வந்துள்ளது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார். 


ஒவ்வொரு சமூகமும் அதன் உள் முரன்பாடுகளால் (இயக்கவியலின் முதல் விதி) வளர்கின்றன, அதில் ஏற்ப்படும் அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் பண்பு மாற்றங்களை (இயக்கவியலின் இரண்டாவது விதி) ஏற்படுத்துகின்றன, படைக்கப்பட்ட புதிய சமூகம், பழைய சமூகத்தில் இருந்து தேவையான தொழில்நுட்பங்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றை நீக்கி விடுகின்றன. இயக்கவியலின் மூன்றாம் விதி). 


மனிதன் தோன்றிய போது 


மனிதனுக்கு மனிதன் சுரண்டல் இல்லை (சுரண்டல் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்),

வர்க்கம் இல்லை (வர்க்கம் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்),
அரசு இல்லை, 
போலீஸ் இல்லை, 
ரானுவம் இல்லை,
குடும்ப அமைப்பு இல்லை,
அவ்வளவு ஏன், பொதுவுடைமை சிந்தனையும் இல்லை, ஆனாலும் அன்று
நம்மால் விரும்பப்படுகிற,
வருங்காலத்தில் வர இருக்கிற,
ஏற்கனவே ருஷ்யாவில் சோதித்தறியப்பட்ட,
பொதுவுடைமை சமுதாயம் நிலவியது என்றால் எப்படி?
அதன் உற்பத்தி முறைதான் காரணம்....

அதாவது, ஆதிமனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதல், சிங்கத்தை வேட்டையாட வேண்டும் என்றால் கல்லெரிந்துதான் கொல்ல வேண்டும் 

(அன்றைய உற்பத்திசக்திகளின் வளர்ச்சி அவ்வளவுதான்) ஒருவர் மட்டும் கல்லெரிந்து சிங்கத்தை கொல்ல முடியாது, சிங்கம் இவரை கொன்று விடும்

எனவே, இருத்தலின் பொருட்டு (தான் உயிர் வாழ்தல் பொருட்டு), மனிதன் கூட்டமாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. 

கூட்டமாக வேட்டையாடுவது, அனைவரும் பகிர்ந்து உண்ணுவது. இதுவே ஆதிபொதுவுடைமை சமூகத்தின் நிலையாகும். 
இதற்கு காரணம் உற்பத்தி சக்த்திகளும்(வெறும் கல்லுதாங்க), உற்பத்தி உறவுகளும்தான் 

(கல்லு எல்லருக்கும் சொந்தமுங்க, இது என் கல்லு, இது உன் கல்லு ன்னு யாரும் அப்ப சண்ட போட்டுக்கல)


சரி, இந்த ஆதிபொதுவுடைமை சமூகம் மறைந்து எப்படி அடிமை சமூகம் வந்தது என்பதை பார்க்க வேண்டும் அல்லவா?


இங்குதான் இயங்கியலின் மூன்று விதிகள் நமக்கு பயன்படுகின்றன.


முதல் விதி: முரன்பாடு (எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராடமும்)

ஆதிபொதுவடைமை சமூகத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் தான் முரன்பாடு
மனிதன் இயற்கையோடு இடையறாது போராடினான் (உயிர் வாழ்தல் பொருட்டுதான்)
விளைவு: உற்பத்தி சக்த்திகள் வளர்ச்சி அடைந்தன (கல்லு கோடரி ஆச்சு, கோடரி ஈட்டி ஆச்சு, ஈட்டி வில் அம்பு ஆச்சு)
உற்பத்தி சக்திகளில் ஏற்படும் இந்த வளர்ச்சிதான்(இரண்டாவது விதி:அளவு மாற்றம்), ஒரு புதிய சமூக அமைப்புக்கு காரணமாக (பண்பு மாற்றமாகிறது) அமைகிறது (வரலாற்றில் இது தவிர்க்க முடியாதது)
நூறு பேர் சேர்ந்து செய்த வேலையை, உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சியால் ஒருவர் மட்டுமே செய்ய முடிந்தது என்பது வர்க்க பிரிவினைக்கு வழிவகுத்தது.
வேட்டையாடுதல் என்ற தொழிலில் இருந்து முதல் உழைப்பு பிரிவினையான கைவினைத்தொழில் தோன்றியது (கோடரி, ஈட்டி செய்தல்).
கைவினைத்தொழில் செய்வோருக்கும் சேர்த்து மற்றவர்கள் வேட்டையாடினர்
காலப்போக்கில் கைவினைப்பிரிவினர் தொழிலில் தேர்ச்சி அடைந்தனர், அவர்களின் சிந்தனை சக்தியும் வளர்ந்தது. 
உற்பத்தியும் பெருகியது, மிகையான உற்பத்தியை ஒரு குழு இன்னொரு குழுவிடம் பறிமாறிக்கொண்டது, 

இப்படியாக ஒரு பிரிவு மக்கள் தீவிர உழைப்பில் இருந்து விடுபட்டனர். 

இவர்கள் ஆண்டைகள் ஆயினர், உழைக்கும் மக்கள் அடிமைகள் ஆயினர். ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் நடக்கும், சண்டையில் தோற்றவர்களில்
ஆன்கள் கொலைசெய்யப்பட்டனர், பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் (இனப்பெருக்கத்திற்காக).

ஒரு புதிய சமூக வடிவம் தோன்றியது. இதுவே அடிமைச் சமூகம் எனப்படும்.


அடிமைச் சமூகம்:


இதன் வளர்ச்சிக்கு காரணம் அதன் முதன்மை முரன்பாடான ஆண்டைகளும் அடிமைகளும் தான்(முதல் விதி)

அடிமைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் (அளவு மாற்றம்), அதன் புரட்சிக்கு (பண்பு மாற்றத்திற்கு) வழிவகுக்கிறது.
அடிமை சமூகத்தில் ஒரு பிரிவு மக்கள் உழைப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு கலை, இலக்கியம், தத்துவம், என்ற இன்ன பிற துறைகளை வளர்த்தனர்.(மூன்றாவது விதி: நிலைமறுப்பின் நிலைமறுப்பு)

சாக்ரடீஸ் மிக சிறந்த சிந்தனையாளர்தான் ஆனால், அவர் அடிமை சமூகத்தை ஆதரித்தவர், "அடிமைகள் இல்லாமல் சமூகம் எப்படி இயங்கும் என்று கேட்டவர்"

அந்த சூழல் அவரை அதற்கு மேல் சிந்திக்க விட வில்லை என்பதே உண்மை (பொருளில் இருந்துதான் சிந்தனை வருகிறது என்பதை இங்கு நினைவுகூர்க)

இங்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முழுமையாக விற்கப்படுகிறான்.

அடிமையின் ஆற்றல், உழைப்பு, திறமை அனைத்தும் அவரை வாங்கிய ஆண்டைக்கே சொந்தமாகும். 
அடிமைக்கு என்று எதுவும் சொந்தம் இல்லை
அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கு வழிவகுத்தது.

நிலப்பிரபுத்துவ சமூகம்:


இங்கு பண்ணயடிமைகள் தங்களுக்கான நிலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்.

மீதி மூன்று நாள் நிலப்பிரபுக்களுக்காக வேலை செய்ய வேண்டும். (அதாவது விளைவதில் பாதி தனக்கு, மீதி நிலப்பிரவுக்கு)
இங்கு பண்னை அடிமை என்பவன் நிலத்தோடு பினைக்கப்பட்டவன்
நிலம் விற்கப்படும் போது நிலத்தோடு அவனும் விற்கப்படுவான். எனவே பண்ணை அடிமையை கொல்லும் அதிகாரம் நிலப்பிரபுவுக்கு கிடையாது.
(அடிமை சமூகத்தில் அடிமையை ஆண்டை கொல்லலாம்!).
எனவே பண்ணையடிமை அரை அடிமை ஆவான்.

இந்த விதத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம் என்பது, அடிமை சமூகத்தை விட முற்போக்கானது.

18ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ முறையே நிலவியது எனலாம். நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்படதுதான் (உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சிதான்), சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. நீராவி இயந்திரங்களை சொந்தமாக கொண்டவர்கள், உற்பத்தியின் துரித வளர்ச்சிக்காக நிலப்பிரபுக்களோடு சண்டையிட்டனர். துனைக்கு பண்ணையடிமகளையும் அழைத்துக்கொண்டனர். 
இயந்திரங்களை மட்டுமே சொந்தமாகக் கொண்ட ஒரு வர்க்கம் தோன்றியது அப்பொழுதுதான்.
அது முதலாளி வர்க்கம் எனப்பட்டது.

(அடிமை சமூகத்தில் அடிமைகள்தான் செல்வம், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலம்தான் செல்வம்).


நிலத்தில் கலப்பபையை மட்டுமே பயன்படுத்த தெரிந்த பண்ணையடிமைகளுக்கு, கல்வி கற்று கொடுக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கு இருந்தது.


ஏனெனில் அப்பொழுதுதான் அவர் ஸ்பேனர் பிடித்து இயந்திரங்களில் வேலை செய்ய முடியும், பண்ணையடிமகளின் உதவியோடு, நிலப்பிரபுக்களை வீழ்த்தி முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இதுவே பிரெஞ்சு புரட்சியாகும். (கூடுதல் தகவலாக, நிலபிரபுக்களையும், முதலாளிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியது லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி)


எனவே பண்ணையடிமை என்பவன் இப்பொழுது ஒரு சுதந்திர தொழிலாளி ஆகிறான்.

ஆனால் இந்த தொழிலாளி இரண்டு வகையிதான் சுதந்திரம் உள்ளவன்.
1. ஒரு தொழிலாளி உழைக்கலாம் அல்லது உழைக்காமல் பட்டினி கிடந்து சாகலாம், இந்த சுதந்திரம் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பன்ணையடிமையோ உழைத்தேயாக வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள்)
2. ஒரு தொழிலாளி எந்த முதலாளியிடம் வேண்டுமானாலும் வேலைக்கு செல்லலாம், இந்த சுதந்திரனும் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பண்ணையடிமையோ முதலாளியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாதவர்கள்.)

எனவே உற்பத்தி சாதனங்களை (இயந்திரங்களை) சொந்தமாக கொண்ட ஒரு (முதலாளி) வர்க்கம், உற்பத்தி சாதனங்கள் சொந்தமாக இல்லாத ஒரு (தொழிலாளி) வர்க்கத்தை முன் நிபந்தனையாக கொண்டிருக்கிறது.


இத்தகைய ஒரு சமூக அமைப்புதான் முதலாளித்துவ சமூக அமைப்பு எனப்படும்.

சமுதாயத்தின் பொருளுற்பத்திமுறைதான் அதன் அடிக்கட்டுமானம், கடவுள், மதம், நம்பிக்கை, அரசு, ராணுவம், தத்துவங்கள், இதெல்லாம் அதன் மேல் கட்டுமானங்கள், 

எனவே இன்றைய கட்டதில், அமைந்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்து, இயக்க விதிகளை பொருத்திப் பார்ப்பதன் மூலம் அடுத்து அமையப்போகும் சமூகத்தை நாம் முன்னறிவிக்க முடியும்.

அதற்கு நாம் பயில வேண்fடியது மார்க்சிய பொருளியல்.

-தொடரும்.
நன்றி : http://vizhivendhan.blogspot.in