Sunday, January 6, 2013

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-3 (உபரி மதிப்பு கோட்பாடு)



மார்க்சிய பொருளியல்
இதில் உபரி மதிப்பு கோட்பாடு குறித்து விளக்கப்படுகிறது

பொருளாதாரத்தின் அடிப்படைகளாக முதலில் நாம் பார்க்க வேண்டியது இவைதான்
1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
2. மதிப்பு
1. பயன் மதிப்பு என்றால் என்ன?
2. பரிவர்த்தனை மதிப்பு என்றால் என்ன?
3. மதிப்பு என்றால் என்ன?
3. பணம் என்றால் என்ன?
4. லாபம் என்றால் என்ன?
5. உபரி மதிப்பு என்றால் என்ன?

ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு எனப்படுவது போல,

ஒரு உயிரின் அடிப்படை அலகு செல் எனப்படுவது போல,

பொருளாதாரத்தின் அடிப்படை அலகு பண்டம் அல்லது சரக்கு (commodity) எனப்படும்.

1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
நாம் நம்முடைய வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து நாமே பயன்படுத்திக் கொண்டால் அந்த தண்ணீர் ஒரு பொருள்தான். ஆனால் அதையே ஒரு பாட்டிலில் அடைத்து சந்தையில் வைத்து விற்றால், அது பண்டம் ஆகிறது

விற்பதற்க்காகவே உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சரக்கு எனப்படும்.

சரக்கு என்பது மதிப்புகளை கொன்டது.
1. பயன் மதிப்பு
2. பரிவர்த்தனை மதிப்பு
3. மதிப்பு

பயன் மதிப்பு:
தண்ணீர் குடிக்க பயன்படுகிறது, புத்தகம் படிக்க பயன்படுகிறது, பேனா எழுத பயன்படுகிறது. இவ்வாறு ஒரு பண்டம் அதன் பயன்பாட்டைப் பொருத்து மதிப்பிடப்படுவது பயன் மதிப்பு எனப்படும்.
பயன்பாடு அல்லாத ஒரு பொருள் பண்டமாவதில்லை.

பரிவர்த்தனை மதிப்பு:
இது சந்தையில் தேவை மற்றும் அளிப்பு (demand and supply) விதியைப் பொருத்து மாறுபடும்.
மக்களுக்கு தேவை (demand) அதிகமாக இருந்தால் அந்த பண்டத்தின் மதிப்பு அதிகரிக்கும். சந்தையில் அளிப்பு (supply) அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு குறையும், இதுவே சந்தைகான பொது விதி. (ஆனால் ஒவ்வொரு பண்டமும் அதன் உண்மையான மதிப்புக்குதான் விற்கப்படுகிறது என்பதை பிறகு பார்க்கலாம்)

மதிப்பு:
பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு அல்லாமல் ஒவ்வொரு பண்டத்திற்கும் உண்மையான மதிப்பு என்று ஒன்று உண்டு,

தங்கத்தின் மதிப்பு ஏன் அதிகமாக இருக்கிறது, செங்கல்லின் மதிப்பு ஏன் குறைவாக இருக்கிறது,
பயன்பாட்டை பொருத்து மதிப்பு அதிகரிக்குமா என்றால், இல்லை, ஏனெனில், தங்கத்தின் பயன்பாட்டை விட தண்ணீரின் பயன்பாடுதான் அதிகம், பயன்பாட்டை பொருத்து என்றால் தண்ணீரின் விலைதான் தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை.

உண்மையில், ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பது என்றால், அதன் மீது செலவிடப்பட்ட மனித உழைப்பைக் கொண்டுதான் நிர்ணயிக்க வேண்டும்.

அதன்படி தங்கத்தின் மிது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு அதிகம். ஆனால் செங்கல்லின் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு குறைவு. எனவேதான் தங்கத்தின் மதிப்பு என்பது தண்ணீரின் மதிப்பை விட அதிகமாக உள்ளது.

ஒருவேளை நாளை யாராவது, புதிய ரசவாதத்தால் செங்கல்லை தங்கமாக மாற்றுகிறார் என்றால், என்ன ஆகும், தங்கத்தின் மதிப்பு செங்கல்லின் மதிப்புக்கு இறங்கிவிடும்.
எனவே ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது அதன் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவைப் பொருத்தது.

சரி, உழைப்பின் அளவை எப்படி நிர்ணயிப்பது?

உழைப்பின் அளவு என்பது அதன் கால அளவை பொருத்தது. அதாவது, அந்த பண்டத்தை தயாரிப்பதற்காக ஆகும் நேரத்தை பொருத்தது.

ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது தனியானதல்ல, அது ஒரு ஒப்பீட்டு வடிவம் ஆகும். அதாவது, ஒரு புத்தகம் செய்வதற்கு 2மணிநேரம் ஆகிறது என்றால், இதை மட்டும் வைத்துக் கொண்டு அதை மதிப்பிட முடியாது. ஒரு பேனா செய்வதற்கு 1மணிநேரம் ஆகிறது என்றால் இப்பொழுது, ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் எனலாம். இதுதான் ஒப்பீட்டு வடிவம் என்பது. மதிப்பை இப்படித்தான் நாம் அளவிட முடியும்.

3. பணம்
மதிப்பு என்பது ஒரு ஒப்பீட்டு வடிவம் என்று பார்த்தோம். ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் என்றால், இரண்டிலும் சம அளவிலான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இதை வேறு விதமாக சொல்வதென்றால், இரண்டு மனிநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் எனலாம். இவற்றை பரிமாறிகொள்ளும் போது பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு பண்டம் தேவைப்பட்டது.

அதாவது 1புத்தகம் = 2பேனா = அரை கிராம் தங்கம் (உதாரணத்திற்கு) என்றால் இங்கு அரைகிராம் தங்கம் பணமாக கொள்ளப்படுகிறது. இது நாமாக ஏற்படுத்திகொண்ட அமைப்புதானே ஒழிய தங்கம் தான் பணமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதையெதையோ வைத்துப் பார்த்து இறுதியாக தங்கத்தை பணமாக வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
எனவே பணம் என்பது பண்ட பரிமாற்றத்திற்கான ஒரு விசேஷ பண்டம்தானே ஒழிய வேறில்லை.
பணம் என்பது முதலாளித்துவ சமுதாயத்தில் தோன்றிய பண்டம் அல்ல, பணம் அடிமை சமுதாயத்திலேயே தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
இந்த பணம்தான் முதலாளித்துவ சமூதாயத்தில் எப்படி மூலதனமாகி ஆட்டிப் படைக்கிறது என்று இனிமேல் பார்க்க இருக்கிறோம்.

4. லாபம்
சமநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் என்றால், இதில் லாபம் என்பது எங்கிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும் அல்லவா?
ஒரு வியாபாரி ஒரு பண்டத்தை வாங்கி அப்படியே இன்னொருவரிடம் விற்கிறார் என்றால் அவருக்கு லாபம் எப்படி வருகிறது?

உதாரணமாக:
உண்மையில் ஒரு சில்லறை வியாபாரி 100 ரூபாய் மதிப்பிலான ஒரு பண்டத்தை 90 ரூபாய்க்கே வாங்கி விடுகிறார். அதை 100 ரூபாய் என்று நுகர்வோரிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.

ஒரு மொத்த வியாபாரியும் 100 ரூபாய் மதிப்பிலான அதே பண்டத்தை 80 ரூபாய்க்கே வாங்கி 90 ரூபாய் என்று சில்லறை வியாபாரியிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இதேபோல் ஒரு முதலாளி 100 ரூபாய் மதிப்பிலான அந்த பண்டத்தை, 60 ரூபாய்க்கே தயாரித்து விடுகிறார், அதை 80 ரூபாய்க்கு விற்று 20 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?

முதலாளி ---- மொத்த வியாபாரி ---- சில்லறை வியாபாரி ---- நுகர்வோர்

இந்த தொடர் வரிசையில் பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்கே சென்று ஆய்வு செய்தால் மட்டுமே அதன் புதிரை விடுவிக்க முடியும்.

எனவே மார்க்சிய ஆர்வலர்களாகிய உங்களுடன் சேர்ந்து ஒரு பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்குள் நுழைவோம் வாருங்கள்,

மாரிக்சியம் என்றால் என்ன? பகுதி-2 (வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்)



இயக்கவியல் பொருள் முதல் வாதம்: 

பொருள்களில் ஏன் மாற்றம் வருகிறது? 

இதற்கு இயக்கவியலை சற்று புரிந்து கொள்வது அவசியம்.

இயக்கவியலில் மூன்று முக்கியமான விதிகள் உண்டு 

1. எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும். 
2. அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல்.
3. நிலை மறுப்பின் நிலை மறுப்பு. 

இந்த மூன்று விதிகளும், 


1. இயற்கை 

2. மனித சமுகம் 
3. மனித சிந்தனை 
மூன்றிற்கும் பொருந்தும்.

எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்


அண்டத்தில் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன, அந்த மாற்றத்திற்கு காரணம் அதன் உள் முரண்பாடுகளே. முரண்பாடுகளின் இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று எதிர்க்கும், ஆனால் ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.


இயற்கையில், பகல் – இரவு, வெப்பம் – குளிர்

மனித சமூகத்தில், உற்பத்தி சாதனங்களும் – உற்பத்தி உறவுகளும்
மனித சிந்தனையில், நனவு மனம் – நனவிலி மனம்

அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல் 


எல்லாவற்றிலும் ஏற்படும் அளவு மாற்றம் வெளிப்படையாக தெரியாது, அளவு மாற்றத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் அது பண்பு மாற்றமாக மாறும்.


இயற்கையில், niiநீரை கொதிக்க வைக்கும் போது அதன் வெப்பநிலையில் ஏற்படுவது அளவு மாற்றம், 100 டிகிரியை தொட்டதும் நீர் ஆவியாவது பண்பு மாற்றம்.

மனித சமூகத்தில், அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் முதலாளித்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது.
மனித சிந்தனையில், ஒரு செயலை சிந்தித்துக் கொண்டே (அளவு மாற்றம்) ஒரு கட்டத்தில் அதற்கான செயலில் ஈடுபடுவது. (பண்பு மாற்றம்)

நிலை மறுப்பின் நிலை மறுப்பு. 


மாற்றத்தின் போது, எல்லாவற்றிலும் பழைய நிலையில் Uஉள்ள தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது. 


இயற்கையில், விதையில் இருந்து செடி வரும்போது விதையில் இருந்து உயிர்த்தன்மையை எடுத்துக் கொண்டு விதையின் ஓடுகள் விலக்கப்படுகின்றன.

மனித சமூகத்தில், ஒரு சமூகத்தில் இருந்து மற்றொரு சமூகம் வரும்போது பழைய சமூகத்தின் தொழில் நுட்பங்களை எடுத்துக்கொண்டு அதன் உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
மனித சிந்தனையில், தேவையானவற்றை மட்டும் கொண்டு மற்றவற்றை புறக்கனிப்பது.

இயக்கவியலின் கருத்தினங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

1. தனியானதும், சிறப்பானதும், பொதுவானதும். 
2. காரணமும் விளைவும். 
3. இன்றியமயாமையும் தற்செயலும். 
4. சாத்தியமும் எதார்த்ததும். 
5. உள்ளடக்கமும் வடிவமும். 
6. சாராம்சமும் நிகழ்வும். 
இவை அனத்தும் இயக்கவியலின் கருத்தினங்கள் எனப்படும். ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. தனியானதும், சிறப்பானதும், பொதுவானதும்
அனைத்து அம்சங்களும் ஒன்றாக உள்ள இரண்டு பொருளோ, நிகழ்வோ இந்த உலகத்தில் இல்லை. அதே சமயத்தில், உலகத்தில் உள்ள எல்லா பொருள்களிலும், நிகழ்வுகளிலும் நிச்சயமாக பொதுவான அம்சம் என்றும் ஏதாவது இருக்கும். உதாரணமாக, இரும்பை எடுத்துக் கொள்வோம், உயிரற்ற பொருள் என்ற அடிப்படியில் அது பொதுவானது. உலோகம் என்ற முறையில் அது சிறப்பானது. இரும்பு என்ற முறையில் அது தனியானது. தனியானது, சிற்ப்பானது, பொதுவானது இவை ஒன்றுக்கொண்று பிரிக்க முடியாதது

2. காரணமும் விளைவும்

ஒரு நிகழ்வு இன்னொரு நிகழ்வுக்கு இட்டுச் சென்றால், 
அந்த முதல் நிகழ்வு காரணம் எனப்படும் இரண்டாவது நிகழ்வு விளைவு ஆகும்.

காரணம் இல்லாமல் விளைவுகள் இருக்கவே முடியாது


3. இன்றியமையாமையும் தற்செயலும்

ஒரு நிகழ்வின் உள்ளார்ந்த செயல் இன்றயமையாதது,
வெளிப்புற தாக்கம் தற்செயல் ஆகும்.

உ.ம்: ஒரு முதலாளி ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துவது இன்றியமையாதது,

ஆனால் அவர் யாரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது தற்செயலானது

4. சாத்தியமும் எதார்த்தமும்

தகுந்த நிலைமகளில் நடைபெறக்கூடியது சாத்தியம் எனப்படும்.
ஏற்கனவே நடைபெற்றிருப்பது எதார்த்தம் எனப்படும்.

எதார்த்தத்தை நிறைவேற்றப் பட்ட சாத்தியம் என்றும். 

சாத்தியத்தை எதிர்கால எதார்த்தம் என்றும் சொல்லலாம்.

5.உள்ளடக்கமும் வடிவமும்

வடிவமும் உள்ளடக்கமும் பிரிக்கப்பட முடியாதவை.
உள்ளடக்கம் வடிவத்தை நிர்ணயிக்கிறது.

முதலில் உள்ளடக்கம் மாறுகிறது, பிறகு அது அதற்கேற்ற வடிவத்தை பெறுகிறது.

புதிய வடிவம் உள்ளடக்கத்தை மாற்றுகிறது.

6. சாராம்சமும் நிகழ்வும்

ஒரு பொருளின் ஒட்டு மொத்த இயல்பும் சாராம்சம் எனப்படும்.
நிகழ்வு என்பது அதனால் ஏற்படும் வெளிப்பாடு ஆகும்.

லெனின் சாராம்சத்துக்கும், நிகழ்வுக்கும் இடையே உள்ள உறவை ஒரு ஆழமான வேகமான நீரோட்டத்துக்கு ஒப்பிட்டார்.

அதன் ஆழத்தையும் வேகத்தையும், கண்களுக்கு தெரிகின்ற அலைகளையும், நுரைகளையும் கொண்டுதான் மதிப்பிட முடியும் என்றார்.


வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்: 


இயங்கியலின் கோட்பாடுகளை


இயற்கைக்கு பொருத்திப்பார்ப்பது - டார்வினியம்

சிந்தனைக்கு பொருத்திப்பார்ப்பது - பிராய்டியம்
மனித சமூகத்துக்கு பொருத்திப்பார்ப்பது - மார்க்சியம்

இங்கு நாம் மார்க்சியம் பற்றி பேசுவதால் அதைப் பற்றி மட்டும் எடுத்துக் கொள்வோம்.

மனித சமூகம் எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?
அதன் திசை வழியை நாம் அறிய முடியுமா?
முடியும் என்கிறது மார்க்சியம்.

இன்று உலகம் முழுவதும் பெரும்பாலும் முதலாளித்துவ சமூகம் உள்ளது,

ஆனால் ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் மன்னராட்சிதான் நடைபெற்றது
எப்படி இது மாறியது?
தனிப்பட்ட மனிதர்களது வீரதீர செயலாலா? 
உயர்ந்த தத்துவங்களினாலா?
இல்லவே இல்லை...

இவற்றிற்கெல்லாம் முன்பு மனிதன் என்பவனுக்கு 

உண்ண உண்வு வேண்டும், உடுக்க உடை வேண்டும், இருக்க இடம் வேண்டும்
இவற்றிற்காக உற்பத்தியில் ஈடுபட வேண்டும். (இந்த உண்மை மிக எளிமையானது, ஆனால் புரிந்து கொள்ளப்படாதது.)

எனவே உற்பத்திமுறைதான் சமூகத்தின் வடிவத்தை தீர்மானிக்கிறது...

ஒவ்வொரு சமூகத்தின் உற்பத்தி முறையையும் ஆய்வு செய்தால், அந்த சமூகத்தின் வடிவத்தை புரிந்துகொள்ளலாம்


இயக்க விதிகளை மனித சமூக வரலாற்றுக்கு பொருத்தி பார்ப்பதுதான், வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் எனப்படும். 


இதற்கு மார்க்ஸ் எடுத்துக் கொண்ட சமூக வரலாறு, 

ஐரோப்பிய சமூக வரலாறு
1. ஆதி பொதுவுடைமை சமூகம்
2. அடிமைச் சமூகம்
3. நிலபிரபுத்துவ சமூகம் 
4. முதலாளித்துவ சமூகம்

இந்த நான்கு சமூகமும் இயக்கவிதிகளுக்கு உட்பட்டு ஒன்றிலிருந்து ஒன்று மாறி வந்துள்ளது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார். 


ஒவ்வொரு சமூகமும் அதன் உள் முரன்பாடுகளால் (இயக்கவியலின் முதல் விதி) வளர்கின்றன, அதில் ஏற்ப்படும் அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் பண்பு மாற்றங்களை (இயக்கவியலின் இரண்டாவது விதி) ஏற்படுத்துகின்றன, படைக்கப்பட்ட புதிய சமூகம், பழைய சமூகத்தில் இருந்து தேவையான தொழில்நுட்பங்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றை நீக்கி விடுகின்றன. இயக்கவியலின் மூன்றாம் விதி). 


மனிதன் தோன்றிய போது 


மனிதனுக்கு மனிதன் சுரண்டல் இல்லை (சுரண்டல் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்),

வர்க்கம் இல்லை (வர்க்கம் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்),
அரசு இல்லை, 
போலீஸ் இல்லை, 
ரானுவம் இல்லை,
குடும்ப அமைப்பு இல்லை,
அவ்வளவு ஏன், பொதுவுடைமை சிந்தனையும் இல்லை, ஆனாலும் அன்று
நம்மால் விரும்பப்படுகிற,
வருங்காலத்தில் வர இருக்கிற,
ஏற்கனவே ருஷ்யாவில் சோதித்தறியப்பட்ட,
பொதுவுடைமை சமுதாயம் நிலவியது என்றால் எப்படி?
அதன் உற்பத்தி முறைதான் காரணம்....

அதாவது, ஆதிமனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதல், சிங்கத்தை வேட்டையாட வேண்டும் என்றால் கல்லெரிந்துதான் கொல்ல வேண்டும் 

(அன்றைய உற்பத்திசக்திகளின் வளர்ச்சி அவ்வளவுதான்) ஒருவர் மட்டும் கல்லெரிந்து சிங்கத்தை கொல்ல முடியாது, சிங்கம் இவரை கொன்று விடும்

எனவே, இருத்தலின் பொருட்டு (தான் உயிர் வாழ்தல் பொருட்டு), மனிதன் கூட்டமாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. 

கூட்டமாக வேட்டையாடுவது, அனைவரும் பகிர்ந்து உண்ணுவது. இதுவே ஆதிபொதுவுடைமை சமூகத்தின் நிலையாகும். 
இதற்கு காரணம் உற்பத்தி சக்த்திகளும்(வெறும் கல்லுதாங்க), உற்பத்தி உறவுகளும்தான் 

(கல்லு எல்லருக்கும் சொந்தமுங்க, இது என் கல்லு, இது உன் கல்லு ன்னு யாரும் அப்ப சண்ட போட்டுக்கல)


சரி, இந்த ஆதிபொதுவுடைமை சமூகம் மறைந்து எப்படி அடிமை சமூகம் வந்தது என்பதை பார்க்க வேண்டும் அல்லவா?


இங்குதான் இயங்கியலின் மூன்று விதிகள் நமக்கு பயன்படுகின்றன.


முதல் விதி: முரன்பாடு (எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராடமும்)

ஆதிபொதுவடைமை சமூகத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் தான் முரன்பாடு
மனிதன் இயற்கையோடு இடையறாது போராடினான் (உயிர் வாழ்தல் பொருட்டுதான்)
விளைவு: உற்பத்தி சக்த்திகள் வளர்ச்சி அடைந்தன (கல்லு கோடரி ஆச்சு, கோடரி ஈட்டி ஆச்சு, ஈட்டி வில் அம்பு ஆச்சு)
உற்பத்தி சக்திகளில் ஏற்படும் இந்த வளர்ச்சிதான்(இரண்டாவது விதி:அளவு மாற்றம்), ஒரு புதிய சமூக அமைப்புக்கு காரணமாக (பண்பு மாற்றமாகிறது) அமைகிறது (வரலாற்றில் இது தவிர்க்க முடியாதது)
நூறு பேர் சேர்ந்து செய்த வேலையை, உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சியால் ஒருவர் மட்டுமே செய்ய முடிந்தது என்பது வர்க்க பிரிவினைக்கு வழிவகுத்தது.
வேட்டையாடுதல் என்ற தொழிலில் இருந்து முதல் உழைப்பு பிரிவினையான கைவினைத்தொழில் தோன்றியது (கோடரி, ஈட்டி செய்தல்).
கைவினைத்தொழில் செய்வோருக்கும் சேர்த்து மற்றவர்கள் வேட்டையாடினர்
காலப்போக்கில் கைவினைப்பிரிவினர் தொழிலில் தேர்ச்சி அடைந்தனர், அவர்களின் சிந்தனை சக்தியும் வளர்ந்தது. 
உற்பத்தியும் பெருகியது, மிகையான உற்பத்தியை ஒரு குழு இன்னொரு குழுவிடம் பறிமாறிக்கொண்டது, 

இப்படியாக ஒரு பிரிவு மக்கள் தீவிர உழைப்பில் இருந்து விடுபட்டனர். 

இவர்கள் ஆண்டைகள் ஆயினர், உழைக்கும் மக்கள் அடிமைகள் ஆயினர். ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் நடக்கும், சண்டையில் தோற்றவர்களில்
ஆன்கள் கொலைசெய்யப்பட்டனர், பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் (இனப்பெருக்கத்திற்காக).

ஒரு புதிய சமூக வடிவம் தோன்றியது. இதுவே அடிமைச் சமூகம் எனப்படும்.


அடிமைச் சமூகம்:


இதன் வளர்ச்சிக்கு காரணம் அதன் முதன்மை முரன்பாடான ஆண்டைகளும் அடிமைகளும் தான்(முதல் விதி)

அடிமைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் (அளவு மாற்றம்), அதன் புரட்சிக்கு (பண்பு மாற்றத்திற்கு) வழிவகுக்கிறது.
அடிமை சமூகத்தில் ஒரு பிரிவு மக்கள் உழைப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு கலை, இலக்கியம், தத்துவம், என்ற இன்ன பிற துறைகளை வளர்த்தனர்.(மூன்றாவது விதி: நிலைமறுப்பின் நிலைமறுப்பு)

சாக்ரடீஸ் மிக சிறந்த சிந்தனையாளர்தான் ஆனால், அவர் அடிமை சமூகத்தை ஆதரித்தவர், "அடிமைகள் இல்லாமல் சமூகம் எப்படி இயங்கும் என்று கேட்டவர்"

அந்த சூழல் அவரை அதற்கு மேல் சிந்திக்க விட வில்லை என்பதே உண்மை (பொருளில் இருந்துதான் சிந்தனை வருகிறது என்பதை இங்கு நினைவுகூர்க)

இங்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முழுமையாக விற்கப்படுகிறான்.

அடிமையின் ஆற்றல், உழைப்பு, திறமை அனைத்தும் அவரை வாங்கிய ஆண்டைக்கே சொந்தமாகும். 
அடிமைக்கு என்று எதுவும் சொந்தம் இல்லை
அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கு வழிவகுத்தது.

நிலப்பிரபுத்துவ சமூகம்:


இங்கு பண்ணயடிமைகள் தங்களுக்கான நிலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்.

மீதி மூன்று நாள் நிலப்பிரபுக்களுக்காக வேலை செய்ய வேண்டும். (அதாவது விளைவதில் பாதி தனக்கு, மீதி நிலப்பிரவுக்கு)
இங்கு பண்னை அடிமை என்பவன் நிலத்தோடு பினைக்கப்பட்டவன்
நிலம் விற்கப்படும் போது நிலத்தோடு அவனும் விற்கப்படுவான். எனவே பண்ணை அடிமையை கொல்லும் அதிகாரம் நிலப்பிரபுவுக்கு கிடையாது.
(அடிமை சமூகத்தில் அடிமையை ஆண்டை கொல்லலாம்!).
எனவே பண்ணையடிமை அரை அடிமை ஆவான்.

இந்த விதத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம் என்பது, அடிமை சமூகத்தை விட முற்போக்கானது.

18ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ முறையே நிலவியது எனலாம். நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்படதுதான் (உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சிதான்), சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. நீராவி இயந்திரங்களை சொந்தமாக கொண்டவர்கள், உற்பத்தியின் துரித வளர்ச்சிக்காக நிலப்பிரபுக்களோடு சண்டையிட்டனர். துனைக்கு பண்ணையடிமகளையும் அழைத்துக்கொண்டனர். 
இயந்திரங்களை மட்டுமே சொந்தமாகக் கொண்ட ஒரு வர்க்கம் தோன்றியது அப்பொழுதுதான்.
அது முதலாளி வர்க்கம் எனப்பட்டது.

(அடிமை சமூகத்தில் அடிமைகள்தான் செல்வம், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலம்தான் செல்வம்).


நிலத்தில் கலப்பபையை மட்டுமே பயன்படுத்த தெரிந்த பண்ணையடிமைகளுக்கு, கல்வி கற்று கொடுக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கு இருந்தது.


ஏனெனில் அப்பொழுதுதான் அவர் ஸ்பேனர் பிடித்து இயந்திரங்களில் வேலை செய்ய முடியும், பண்ணையடிமகளின் உதவியோடு, நிலப்பிரபுக்களை வீழ்த்தி முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இதுவே பிரெஞ்சு புரட்சியாகும். (கூடுதல் தகவலாக, நிலபிரபுக்களையும், முதலாளிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியது லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி)


எனவே பண்ணையடிமை என்பவன் இப்பொழுது ஒரு சுதந்திர தொழிலாளி ஆகிறான்.

ஆனால் இந்த தொழிலாளி இரண்டு வகையிதான் சுதந்திரம் உள்ளவன்.
1. ஒரு தொழிலாளி உழைக்கலாம் அல்லது உழைக்காமல் பட்டினி கிடந்து சாகலாம், இந்த சுதந்திரம் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பன்ணையடிமையோ உழைத்தேயாக வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள்)
2. ஒரு தொழிலாளி எந்த முதலாளியிடம் வேண்டுமானாலும் வேலைக்கு செல்லலாம், இந்த சுதந்திரனும் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பண்ணையடிமையோ முதலாளியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாதவர்கள்.)

எனவே உற்பத்தி சாதனங்களை (இயந்திரங்களை) சொந்தமாக கொண்ட ஒரு (முதலாளி) வர்க்கம், உற்பத்தி சாதனங்கள் சொந்தமாக இல்லாத ஒரு (தொழிலாளி) வர்க்கத்தை முன் நிபந்தனையாக கொண்டிருக்கிறது.


இத்தகைய ஒரு சமூக அமைப்புதான் முதலாளித்துவ சமூக அமைப்பு எனப்படும்.

சமுதாயத்தின் பொருளுற்பத்திமுறைதான் அதன் அடிக்கட்டுமானம், கடவுள், மதம், நம்பிக்கை, அரசு, ராணுவம், தத்துவங்கள், இதெல்லாம் அதன் மேல் கட்டுமானங்கள், 

எனவே இன்றைய கட்டதில், அமைந்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்து, இயக்க விதிகளை பொருத்திப் பார்ப்பதன் மூலம் அடுத்து அமையப்போகும் சமூகத்தை நாம் முன்னறிவிக்க முடியும்.

அதற்கு நாம் பயில வேண்fடியது மார்க்சிய பொருளியல்.

-தொடரும்.
நன்றி : http://vizhivendhan.blogspot.in

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-1 (பொருள் முதல் வாதம்)





மார்க்சியம் என்பது மூன்று துறைகளை உள்ளடக்கியது,

1. மார்க்சிய மெய்யியல்
2. மார்க்சிய பொருளியல்
3. மார்க்சிய அரசியல்
ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. மார்க்சிய மெய்யியல்
இதில் வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் குறித்து பேசப்படுகிறது.

பொருள்:

பொருள் என்றால் என்ன?
பொருள் என்பது நமக்கு புறத்தே உள்ளது.

பொருளை எப்படி அறிவது?
ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் அனைத்தும் பொருள்கள்தான். கண்ணால், காதால், நாசியால், வாயினால் மற்றும் உடலால் உணரப்படுவது அனைத்தும் பொருள்கள். காற்று என்பதும் ஒரு பொருள்தான்.

கருத்து:

ஐம்புலன்களால் அறிய முடியாதவை என்று ஏதேனும் உண்டா?
ஆம். ஐம்புலன்களால் அறிய முடியாதவைகள் உண்டு. அவை அனைத்தும் கருத்து எனப்படும். நம் சிந்தனையில் உருவாகும் எதுவும் நாமாக வெளிப்படுத்தாத வரையில் மற்றவருக்கு தெரியாது. அவைகள்தான் கருத்து எனப்படும்.

பொருள் முதல் வாதம்:

பொருள்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது அறிவியல் விதி. பொருளை நீங்கள் தூள் தூளாக உடைக்கலாமே தவிர அவற்றை அழிக்க முடியாது. அதன் வடிவங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருக்கும்.
பொருளின் வடிவங்களுக்கு வயது உண்டே தவிர,
பொருளுக்கு வயது கிடையாது.

கருத்தின் வயது என்ன?

கருத்து என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தம். மற்ற உயிரினங்களுக்கு கருத்து இல்லை.
குருவி போல் மனிதன் என்றுமே கூடு கட்டமுடியாதுதான், ஆனால் குருவி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே வடிவிலான கூட்டை மட்டுமே கட்டும். ஆனால் மனிதன் முன்கூட்டியே சிந்திக்கும் திறன் பெற்றிருப்பதால்தான் அவனால் நீருக்குள்ளும் வீடு கட்ட முடிகிறது.
கருத்து என்பது மனித மூளையின் தன்மை.
கருத்தின் உறுப்பு மனித முளை ஆகும்.
வெளிப்படுத்தாத வரை ஒருவரின் கருத்தை யாராலும் அறிய முடியாது. கருத்து உருவாகும் உறுப்பு மூளை.

அந்த வகையில் கருத்துக்கு மனிதனின் வயது மட்டுமே
ஆனால்
பொருள்களுக்கோ ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.
எனவே பொருளே முதல் என்பது இதன் மூலம் தெளிவு.
அறிவியல் வளராத காலத்தில் நம்மை சுற்றியுள்ள இந்த பருப்பொருள்கள் (பொருளின் வடிவங்கள்) ஆதியும் அந்தமும் இல்லை என்று சொன்னால் யாரும் நம்பவில்லை, எனவே இவை அனைத்தையும் ஒருவரின் கையில் கொடுத்து அவர்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்றனர்.
அந்த ஒருவர் தான் கடவுள்.
அந்த வகையில் கடவுள் வெறும் கருத்துதான்.
ஏனெனில் கடவுளுக்கு சொல்லப்படும் விளக்கம் என்ன?
அவர் புலன்களால் உணரமுடியாதவ்ர்.
எனவே கடவுள் வெறும் கருத்துதான்.
கடவுள் மனிதனால் படைக்கப்பட்டதே ஒழிய மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் அல்ல.

இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்றால் என்ன?

-தொடரும்
 நன்றி : http://vizhivendhan.blogspot.in

Friday, November 30, 2012

ஜனநாயகத்தை மென்று விழுங்கும் சாதி

மிகச் சாதாரணமாய் நடந்து முடிந்த
அசுரவேட்டையிது
சாதியின் எரிதழல் கொண்டு நீ
எரியூட்டிய‌ நெருப்பில்
உருசிதைந்து போனது நத்தம் சேரிக்குடிசைகள்
நடமாடும் மனிதர்களைத் தவிர
வேறெதுவும் மிஞ்சிடவில்லை
ஜனநாயகத்திற்கெதிராக எழுதப்பட்ட
உன் வாய்ச்சவுடாலில்
எரிந்து சாம்பலாகிப் போனது
சேரி மக்களின் உடைமையும் வாழ்க்கையும்
எதற்கும் பயன்படாத சாதியை
வெஞ்சினம் மூட்டி
தீயிட்டுக் கொளுத்துவதன் மூலம்
நிலைநிறுத்த முயற்சிக்கிறாய்
உடைமையிழந்தவர்களை நிம்மதியிழந்தவர்களை
தேற்றுவதற்கோ, ஆறுதல் சொல்வதற்கோ
நம்மிடையே யாருமில்லை
எங்கோ நடந்து முடிந்ததாய்
பெருமூச்செறியும் தாழ்த்தப்பட்டோர் ஒருபுறமிருக்க
சாதி கடந்து கைகுலுக்கி தலித்அரசியலை
நிலைநிறுத்திய தலித் அரசியல் கட்சிகள் மறுபுறமிருக்க
இரணங்களின் காயம் வடுக்களாய் மாறி
நம்மீது எச்சிலை உமிழ்கிறது.
எரியூட்டப்பட்ட நெருப்புக்குக் காரணம்
சாதி மறுப்புத் திருமணமென்று நியாயம் பேசுகிறது
ஊடகங்களும் உளவாளிகளும்…
சனநாயகத்தை மென்று விழுங்கும்
சாதி வன்மம் மறந்து,
சாதி ஆதிக்கம் மறந்து.
இதுவரை நடந்தேறிய வன்முறைகளுக்கெல்லாம்
சாதி மறுப்புத் திருமணம் தான் காரணமெனில்
சூளுரையேற்போம்…
இனி நடக்கவிருக்கும் திருமணங்கள்
சாதி மறுப்புத் திருமணங்களாய்
விதைத்தெழுவோம்!!
- வழக்கறிஞர் நீதிமலர்

தமிழினத்திற்குத் தலைகுனிவு -த‌.தே.பொ.க.


தர்மபுரி மாவட்டத்தில் நடந்துள்ள சாதி வெறியாட்டம் தமிழ் இனம் தலைகுனிய வேண்டிய வெட்கக் கேடான நிகழ்வாகும். இது சாதி மோதல் அன்று. ஒரு சாதியில் உள்ள வெறியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இன்னொரு சாதி மக்கள் மீது நடத்திய அட்டூழியமும், அழிவு வெறியாட்டமும் ஆகும்.
நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் உள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகள் பெட்ரோல் குண்டு வீச்சாலும், தீ வைப்பாலும், கடப்பாறை போன்ற கருவிகளால் தாக்கப்பட்டதாலும் வெந்தும், தகர்ந்தும் நிர்மூலமாகக் கிடந்ததை நேரில் பார்த்து நெஞ்சு பதைத்த பின் இவ்வாறு எழுதுகிறோம்.
இருபத்தோராம் நூற்றாண்டில் நம் மண்ணில் இப்படியுமா நடக்கும்? இதைக் காட்டுமிராண்டித்தனம் என்றால் காட்டுமிராண்டிகளைக் கொச்சைப்படுத்தியதாகும். அத்தனை கயமைத்தனம், வன்மம், பழிவாங்க வேண்டும் என்ற வெறி அங்கே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இத்தனை வெறியாட்டம் நடத்தும் அளவுக்கு அந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், மேல் சாதிக்காரர்களுக்கு எதிராக என்ன தீங்கு செய்தார்கள்? எதுவும் இல்லை.
நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட(பறையர்) வகுப்பு இளைஞர் இளவரசன் பக்கத்து ஊரான செல்லன்கொட்டாய் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த நாகராசு மகள் திவ்வியாவைக் காதலித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து, முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். நாகராசு, தன்மகளை இளவரசன் கடத்திக் கொண்டு போனதாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
காவல்துறையினர் மணமக்கள் இருவரையும் விசாரித்து உண்மை நிலை அறிந்து கொண்டனர். இது கடத்தல் இல்லை, உரிய வயது வந்த இருவர் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களைப் பிரிக்க சட்டத்தில் இடமில்லை என்றனர்.
திவ்வியாவின் தந்தை நாகராசு அதற்குமேல் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. அவர் வகுப்பைச் சேர்ந்த தீவிர சாதிவாதிகள், அவரை நச்சரித்து, மீண்டும் மீண்டும் தூண்டி, எப்படியாவது பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று வற்புறுத்தினர்.
கடைசியாக 2012 நவம்பர் 8 அன்று தொப்பூரில் இரு தரப்பினரும் சந்தித்துப் பஞ்சாயத்தாகப் பேசித் தீர்வு காண்பது என்று முடிவானது. ஒரு தரப்புக்கு ஏழு பேர் என்று இரு தரப்பினரும் பேசினர். “தன் கணவனைப் பிரிந்து வர முடியாது” என்று திவ்வியா உறுதியாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் சொந்த ஊரில் சொந்த சாதியினர்க்கு என்ன விடை சொல்வது என்று குழம்புகிறார் நாகராசு. தூக்கு மாட்டிக் கொள்கிறார். ஒருவகையில் அவரைத் தற்கொலை நோக்கித் தூண்டியவர்கள் சொந்த சாதியினர்தான் என்றே கூறலாம்.
அதன்பிறகு அவர் பிணத்தை சாலையில் போட்டு, சாதிக்காரர்களுக்கு வெறியேற்றி ஆயிரக்கணக் கானோரைத் திரட்டிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சூறையாடவும் தீக்கீரையாக்கவும் கிளம்பினர். பெட்ரோல் குண்டுகள் வீசினர். தீ வைத்தனர். கடப்பாறை போன்ற கருவிகளால் வீடுகளை இடித்துத் தகர்த்தனர். பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர். கொள்ளையடிப்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள். புத்தகங்கள், சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் ஆகியவற்றைக் குறிபார்த்து எரித்துள்ளனர்.
சிங்களப் படையினர் ஈழத்தமிழர் கிராமங்களைக் கொளுத்திச் சூறையாடியதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அங்கு பகையினத்தைச் சேர்ந்த வெறியர்கள், தமிழர்கள் குடியிருப்புகளைத் தகர்த்தனர். இங்கோ ஒரே தமிழினத்தைச் சேர்ந்த ஒரு வகுப்பினர் இன்னொரு வகுப்பினர் குடியிருப்புகளைத் தீவைத்துச் சூறையாடியுள்ளனர். தமிழினத்திற்கு இதைவிட மானக்கேடு என்ன உள்ளது?
தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சிலர், வன்னியர் வகுப்பினரை இழிவாகப் பேசி ஆத்திரமூட்டினார்கள்; அதனால் ஏற்பட்ட திடீர் ஆவேசத்தால், இப்படிப்பட்ட தீ வைப்புச் சூறையாடலில் ஈடுபட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில், நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி மூன்றும் வெவ்வேறு கிராமங்கள். நத்தத்திற்கும், கொண்டம்பட்டிக்கும் இடையே மூன்றரைக் கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.
ஏற்கெனவே, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்த பொறாமை கொண்டோர், இந்தக் கலப்புத் திருமணத்தை சாக்காக வைத்து, தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தைத் தாக்கிக் தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் பலர் அரசுப்பணிகளில் இருக்கின்றனர். ஓரளவு வசதியுடன் உள்ளனர். படித்துள்ளனர். இவ்வளர்ச்சி அப் பொறாமைக்காரர்களின் கண்ணை உறுத்தியுள்ளது. தங்களுக்குச் சமமாக அவர்களும் வந்து விடுவார்களோ என்று கவலைப்பட்டிருக்கிறார்கள்.
சாதியைப் பயன்படுத்தி இந்த அழிவு வேலையில் ஈடுபட்ட அரம்பத்தனத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட நாசவேலை இது. இதில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தளைப்படுத்த வேண்டும்.
தங்கள் சாதிப் பெண்களைக் கலப்புத் திருமணம் செய்யும் பிற சாதியினரை வெட்ட வேண்டும் குத்த வேண்டும் என்று பேசும் பிற்படுத்தப்பட்ட சாதி சங்கத் தலைவர்கள் மீது நடவடிக்கை தேவை.
ஒரு மாதத்திற்கு மேல் இக்கலப்புத் திருமணத்தால் நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் சாதிப் பதற்றம் இருப்பது காவல்துறைக்குத் தெரியும். காவலர்கள் சிலரையும் அங்குக் காவலுக்கு நிறுத்தியுள்ளார்கள். இவ்வாறு முன்தகவல்கள் இருந்தாலும் மூன்றரை மணி நேரம் இந்த அரம்பத்தனம் அரங்கேறும் போது, கூடுதல் எண்ணிக்கையில் காவல்துறையினரை உடனடியாக அனுப்பி அதைத் தடுக்கவில்லை மேலதிகாரிகள்.
தர்மபுரியிலிருந்து 10 நிமிடப் பயணத் தொலைவில் உள்ளது நாயக்கன் கொட்டாய். காவல்துறை உயரதிகாரிகள் கடமை தவறியது ஏன்? அலட்சியமா? கெட்ட உள்நோக்கமா? விடை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு.
பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அனைத்து முனைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். அதன் ஆய்வறிக்கையையும் பரிந்துரைகளையும் தமிழக அரசு பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும், புதுவீடுகள் கட்டித் தர வேண்டும். எல்லாப் பொருள்களையும் இழந்து நிற்கும் மக்களுக்கு குடும்பச் செலவுகளுக்காக நிதி வழங்க வேண்டும்.
தமிழர்கள் அனைவரும் ஒரே இனம், ஒரே குருதி என்ற சமத்துவப் பண்பாடு வளர வேண்டும். தமிழ்த்தேசியம் தமிழின உரிமைகளை மீட்கப் போராடும் அதே வேளை, தமிழினத்திற்குள் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளை முறியடிக்கவும் போராடும்.
நினைவுநாள் படுகொலைகள்
ஈகி இமானுவேல் சேகரன் (செப்டம்பர் 11) நினைவு நாளும், முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளும் (அக்டோபர் 30) ஒவ்வொரு ஆண்டும் பதற்றத்தோடுதான் நடக்கின்றன. சில ஆண்டுகளில் படுகொலைகளும் சேர்ந்து கொள்கின்றன.
கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 6 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு இருநாள் முன்னதாக பழனிக்குமார் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவனை அடித்துக் கொன்றனர் மேல்சாதி வெறியர்கள்.
இவ்வாண்டு, முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளை ஒட்டித் தேவர் வகுப்பினர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளில் பசும்பொன் கிராமத்தில், அவரது நினைவிடத்திற்குச் செல்வோர் எந்தெந்தப் பாதைகளில் போக வேண்டும், வரவேண்டும் என்று காவல்துறையினர் தடம் வகுத்துள்ளனர். அப்பாதையில் செல்லாமல் பரமக்குடி பொன்னையாபுரம் வழியாகவும், பாம்புவிழுந்தான் கிராமம் வழியாகவும் சென்றவர்களில் மூன்று பேர் அப்பகுதியில் வசிக்கும் தேவேந்திரர் வகுப்பினரால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
ஒரு டாட்டா சுமோ ஊர்தியில் பசும்பொன் சென்று திரும்பியவர்கள் மீது தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை அருகே, பெட்ரோல் குண்டு வீசினர். அதில், படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில் இதுவரை ஆறு பேர் இறந்துபோயினர். இவை அனைத்தும் கொடுமையான பச்சைப் படுகொலைகள் ஆகும். கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
தலைவர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்ற பெயரில் இருவகுப்பினரும் தங்கள் தங்கள் சாதி வலிமையைக் காட்டிக் கொள்ளவே முனைகின்றனர். இவ்விரு தலைவர்களின் நினைவு நாளுக்கு அங்கு செல்லும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அந்தந்த சாதி வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே செல் கின்றனர். அதனால்தான், அண்ணா, பெரியார், காமராசர் நினைவிடங்களைவிட மேற்கண்ட இருவரின் நினைவிடங்கள் “புகழ்” பெற்று விளங்குகின்றன.
தாங்கள் போற்றும் தலைவர்களை சாதி மோதலுக்குரிய சின்னங்களாக மாற்றுவது அத்தலைவர்களுக்கு செலுத்தும் மரியாதை அன்று அவமரியாதை.
 நன்றி :http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22155:2012-11-30-10-04-09&catid=1541:162012&Itemid=786

Monday, November 19, 2012

துணங்கைக் கூத்து - நூல் அறிமுகம்

(நவம்பர் 18,2012 ஜனசக்திில் வெளியான நூல் அறிமுகம் பகுதியில்)
     இந்நூல் உலகியலை நடப்பியலுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. இலங்கையில் போர்களத்தில் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதைத் தெரிவித்துள்ளபோது,பிணங்களை மட்டுமல்லாது பேய்களையும்  பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. பிணங்களையும் பேய்களையும் விடாத பேய்பயல்கள் மக்களை என்ன செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்யத் தோன்றுகிறது.கலிங்கத்துப் பரணியில் காளியும் கூளியும் பிண்ந்தின்னக் காத்திருக்கும் காட்சிகளைக் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் கதையாசிரியர்.
    
     சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போரிட்ட ஒரு வீரனின் புதைவிடத்தில் சடங்குகள் நடத்துவதற்குப் பிராமணப் புரோகிதரின்  எதிர் பார்த்திருப்பது காலத்தின் கோலத்தைக் காட்டுவதாகும். ஒரு காலத்தில் ஆரிய ஆதிக்கம், சமஸ்கிருத மயமாக்கம் என்றெல்லாம் அபயக்குரல் எழுப்பியதுடன்  இந்தி எதிர்ப்புப் போர் நடத்திய தமிழகத்தில் அமைதியாக சமஸ்கிருத மயமாக்கம் பெயர் சூட்டும் முறையில் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாமாகவே முன்வந்து வலையில் விழுந்து கொண்டிருக்கிறோம்.
     பணம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்று அலைந்துகொண்டிருக்கும் இளைங்கர்களின் வெளிநாட்டு வேலைக்கனவு எவ்வளவு கொடுமையானது என்பதை ஒரு கதை விளக்குகிறது. காய்ச்சலில் கிடந்தால் வெந்நீர் வெதுப்பித் தருவதற்குக் கூட ஆள் கிடையாது. பணம் மட்டும் இருந்து எதற்கு என்று வினாத் தொடுக்கிறது ஒரு கதை. நம் நாட்டில் கிடைக்கும் சம்பளத்துடன் வெளிநாட்டில் கிடைப்பதை ஒப்பிடும்போது அது அதிகமாகத் தெரிகிறது. ஆனால் அந்த நாட்டில் ஒருவனுக்கு கொடுக்கப்படுவதை ஒப்பிடாமல் இது மிகக் குறைவு என்று தெரியும். அப்படித் தெரிய வரும்போது மனம் உடைந்துபோகிறது.
     காதல், ஆன்மீகம், மாயம், அதிவிரைவான முன்னேற்றம், கனவுப் பாட்டுடன் ஒரேநாளில் உச்ச நிலைக்குச் செல்லுதல் இப்படிச் செல்லும் இப்போதைய தமிழகக் கதைக்களகத்தில் உண்மையையும் நடப்பையும் மக்களறிய எடுத்தியம்பியுள்ளது இந்நூல்.
     காதல் கதையிலும் ஒரு மென்மையான கதையைச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அது மனத்தில் உள்ளதை வெளியில் சொல்லிவிட்டால் உறவு கெட்டுவிடுமோ என்று எண்ணும் வகையைச் சேர்ந்தது.
     வெயிலில் அலையும்போதுதான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள். அதுபோல ஒருவருக்கு உணவு கொடுத்து உடை துவைத்து, உடல் நலம் பேணி எப்படியெல்லாம் அவர் மனைவி பணிவிடையாற்றுகிறாள் என்பது ஒரு கதையில் விளக்கப்பட்டுள்ளது. அவள் இறந்தபோதுதான் அருமை அவருக்குப் புலப்படுகிறது.
     இலக்கிய நடையில் சில கதைகள் மிளிர்கின்றன. வட்டார நடையில் சில கதைகள் விளங்குகின்றன. எளிய இனிய சொற்களில் இக்காலத்து மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியவற்றை எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். யார் மனமும் புண்படாதபடி மனிதர்களின் உணர்வுகளை நிகழ்வுகளாலும் எண்ணங்களாலும் விவரித்துள்ளார். 
- சே. பச்சைமால் கண்ணன்

Thursday, October 25, 2012

முதல் இந்திய விடுதலைப் போர் எது?

முதல் இந்திய விடுதலைப் போர் எது? 1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போரே "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று வடநாட்டரால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் மதங்களின் சாயலோடு வெளிப்பட்ட போர். ஆனால் இந்தப் போருக்கு 57 ஆண்டுகளுக்கு முன்னர் சாதி, மத பேதங்களைக் கடந்து, உழைக்கும் மக்களை பெரும் திரளாக அணிதிரட்டி வெள்ளையர் படைக்கு எதிராக போரிட்டவர்கள் ம
ருது பாண்டியர்கள் ஆவார். தூந்தாஜி வாக் (கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக் (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), ஆகியோரோடு இணைந்து "ஜம்புத்தீவு -தென்பகுதி- கூட்டமைப்பை" உருவாக்கி வெள்ளையருக்கு அதிக உயிர் சேதத்தை உருவாக்கிய மன்னர்கள் மருதிருவர் என்று ஜேம்ஸ் வெல்ஷ் என்பவன் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளான். சின்ன மருது வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடன" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. "ஜம்புத்தீவு புரட்சிப் பிரகடன அறிக்கை" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது. இதைப் படித்து ஆத்திரமுற்ற வெள்ளையர் அரசு சின்னமருது உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் 500 பேரை கைது செய்து திருப்பத்தூரில் தூக்கிலேற்றியது. 1800- களில் இதுபோன்றதொரு வரலாற்றுப் பதிவு வடநாட்டில் கிடையவே கிடையாது. வீரஞ்செறிந்த மருதிருவர் நடத்திய தமிழர் போராட்டத்தை தில்லியரசு திட்டமிட்டு மூடி மறைத்து விட்டது. இந்திய தேசியக்கட்சித் தலைமைகள் வடநாட்டார் கையில் இருப்பதால் 1857- ஆம் ஆண்டுப் புரட்சியை வெட்கமின்றி "முதல்ப் புரட்சி" யென்று முன்மொழிகின்றன. திராவிடக்கட்சிகளும், சாதிய இயக்கங்களும் இந்திய தேசியம் வாந்தியெடுத்ததையே இப்போதும் வாங்கி விழுங்குகின்றன. 1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியைக் கூட "தென்னிந்திய புரட்சி" என்று சொல்லும் பாரதமாதா பஜனைகள் 1857ஆம் ஆண்டுப் புரட்சியை "வட இந்தியப் புரட்சி" என்று சொல்வது தானே பொருத்தமானது. வரலாறு என்பது கங்கை கரையிலிருந்து தொடங்கக் கூடாது. காவிரிக் கரையிலிருந்து தொடங்க வேண்டும் என்பார் அறிஞர் அண்ணா. திருத்தப் பட்ட வரலாற்றை தமிழர்களே! திருத்தியெழுதுவோம்! ||மருதுபாண்டியர் தூக்கிலிட்ட நாள்|| *24.10.1801*