Monday, September 17, 2012

அணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது!!

அணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது!!
(முழுமையாக படிக்கவும்!!)

அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவுதகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)

Tuesday, September 4, 2012

தண்ணீர்,,,,தாகம் தீர்க்குமா?


தண்ணீர்,,,,

---------------------
பொலிவியா தரும் படிப்பினை 
 ---------------------------------------------------------------                                                                                                                                                   -தே. இலட்சுமணன்
தண்ணீர் வழங்கும் திட்டத்தையும், மத்திய அரசு தன் பொறுப்பு அல்ல என்று தட் டிக்கழித்துவிடவும் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரத் தயாராகி விட்டது. இதுபற்றிய விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
 
பொலிவிய ஏரி ஒன்றின் அழகு.



தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமை. உயிர் வாழ்வதற்கான ஆதாரம் அது. அரசு, மனிதர்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டியது, அதற்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் அடிப் படை கடமை. ஆனால் இப்போதைய மத்திய ஆட்சியாளர்களின் சதித்திட்டத்தின் காரண மாக மக்களுக்கு தண்ணீர் வழங்கும் திட் டத்தை தனியார் கையில் தாரைவார்க்க ஏற் பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சதி நிறை வேறினால், அடுத்து இயற்கை தந்த வரமான காற்றையும் ஒரு பண்டம் என்று கூறி அதன் மீதும் தனியார் கம்பெனிகள் பாத்தியதைத் கொண்டாட தனியாருக்கு சொந்தமாகச் சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

மக்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாகப் பயன்படும் வகையில் இயற்கை தந்துள்ள வளங்களை - குறிப்பாகத் தண்ணீரை சந்தைச் சரக்காக ஆக்க ஐந் தாண்டுகளுக்கு முன்னாலேயே உலக வங்கி ஆணையிட்டுள்ளதைத்தான் இந்திய அரசும் அகமகிழ்வோடு அமல்படுத்திட விழைகிறது. இது இயற்கை நீதிக்கே எதிரானது.
 
டிடிகாகா வில்மூடி ஏரி[பொலிவியா]


மாளிகையில் வாழ முடியாத மனிதன் மண்குடிசையில் வாழ முடியும், உடல் நலம் கெட்டவன் கார்ப்பரேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் பச்சை இலை மருந்தையாவது தின்று நோய் குண மாக்க முடியும். ஆனால் வறியவனிடமிருந்து குடிக்கும் தண்ணீரையும் பறித்து விட்டால், தண்ணீருக்கு மாற்றாக அவன் எதை நாடமுடியும்?

மக்களுக்கு எதிரான இந்த அரசை மாற் றுவதைத் தவிர மக்களுக்கு வேறு மாற்றே இல்லை. இதற்கு உதாரணம், நம் முன்பாக பொலிவியா நாட்டில் நடந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல பாடமாக உள்ளன.

பொலிவியாவில் எல்லா பொது நிறுவனங் களும், மின்சாரம், ஆகாயப் போக்குவரத்து, சுரங்கம், காடுகளில் கிடைக்கும் எல்லா வளங்களும் மற்றும் செய்தித் தொடர்புகள், ஹைட்ரோ கார்பன் இப்படி - அனைத்தும் முழுக்க, முழுக்க தனியார்மயம் ஆகிவிட்டன. அந்த நாட்டில் மிச்சமிருந்த தண்ணீர் ஒன்று தான் தனியார்மயமாகாமல் இருந்தது. அதைப் பொறுக்காத உலக வங்கி தண்ணீரையும், தனி யாருக்குத் தாரை வார்க்க பொலிவியா அரசை நிர்ப்பந்தித்தது. ஆசை வார்த்தைகள் பல வற்றை அள்ளி வீசியது. பொலிவியா அரசும் மயங்கி பேரம் பேசி ஒப்பியது. பொலிவியாவின் நீர் வளங்களை தனியார் கம்பெனிகளுக்கு ஒப்பந்தம் போட்டுக் கொடுத்து விட்டால், பொலிவியா அரசு உலக வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் 600 மில்லியன் டாலரை ரத்து செய்து விடுவதாக தாஜா செய்தது. அர சும் ஏற்றது. குழியில் வீழ்ந்தது. ஆம். ஆண்டு கள் பலவாக, பல தலைமுறைகளாக சமூகத் தின் ஆளுமையின் கீழ் சொந்தம் கொண்டா டப்பட்ட நீர் “சரக்கு - பண்டம்” என நாமகரணம் சூட்டப்பட்டு, தனியார் கம்பெனிகளின் ஆளு கையின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதற்கு விலையும் நிர்ணயிக்கப்பட்டது.மக்களின் அடிப்படை வாழ்க்கையோடு ஜீவாதாரத் தோடு பொலிவியா எதேச்சதிகார அரசு விபரீத விளையாட்டைத் துவக்கி விட்டது. குடிநீர் மட்டுமல்ல, விவசாயத்துக்குப் பயன்படும் பாசன நீரும் அளவின் அடிப்படையில் விலைக்கு விற்கப்பட்டது.

மனித வாழ்க்கையோடு இணைந்து இருந்த தண்ணீர் இப்போது அந்நியப்படுத்தப் பட்டு விட்டது. பொலிவியாவின் ஜனாதிபதி யாக இருந்த ஒரு சர்வாதிகாரி - ‘யூகோ பேன் சர்’ என்ற தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தியவர் தான் இந்தக் கொடுமையைச் செய்தவர்.
 


லண்டனை இருப்பிடமாகக் கொண்ட அந்நிய கம்பெனிகளான இண்டர்நேஷனல் வாட்டர் லிமிடெட், அதோடு இணைந்து செயல்படும் இத்தாலியன் யுடிலிட்டி எடிசன் மேலும் அமெரிக்காவை இருப்பிடமாகக் கொண்ட பாச்டட் எண்டர்பிரைசஸ் - பொலி வியாவுக்கு சொந்தமான தண்ணீரை மொத்த மாக குத்தகைக்கு எடுத்து விட்டன. எடுத்த எடுப்பில் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். மாதம் உணவுக்கு ஆகும் செலவை விட தண்ணீருக்கு ஆகும் செலவு அதிகரித்தது. நீரின் விலை திடீரென 35 சத விகிதம் ஏற்றப்பட்டு விட்டது.

உதாரணமாக ஒரு குடும்பம் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி வந் ததால், வருமானத்தில் 10 நாளைக்கு உண வுக்குச் செலவாகும் தொகைக்கு ஈடாக தண் ணீருக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. சென்ற மாத செலவை விட இந்த மாதச் செலவு 300 சதவிகிதம் உயர்ந்து விட்டது.
 


இந்தக் கொடுமையை ஏழை, எளிய மக் கள் எப்படி சமாளிக்க முடியும்? விவசாயி களின் வேதனை சொல்லி மாளாது. எனவே, எரிமலை வெடித்தது.

2000 ஜனவரி மாதம் கொதித்தெழுந்த மக் கள், வேலைநிறுத்தம் செய்தார்கள். சாலை கள் மறிக்கப்பட்டன. நான்கு நாட்கள் கோச்ச பாம்பினாஸ் நகரம் ஸ்தம்பித்தது. வேலை நிறுத்தத்தின் வீச்சு, மேலும் சாலை மறியல் அரசை அதிர வைத்தது. உடனே தண்ணீர் விலையைக் குறைப்பதாக அரசு செய்தி வெளி யிட்டது. ஆனால் வாக்குறுதி அமல்படுத்தப் படவில்லை.

மறுபடியும் பிப்ரவரி 4ம் தேதி ஆயிரக் கணக்கான மாக்கள் திரண்டு அமைதியான எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள். இதைப் பொறுக்க மாட்டாத சர்வாதிகாரி பேன்சர் போலீசை ஏவினார். இரண்டு நாட்கள் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதில் மக்களில் 175 பேர் படுகாயமடைந்தனர். இரண்டு பேர் பார்வை இழந்தனர்.

கிராமப்புற மக்கள் எழுப்பிய சாலை தடை களால் நகரங்களுக்குப் போய்ச் சேர வேண் டிய உணவுப்பொருட்கள் தடுக்கப்பட்டன. போக்குவரத்து முற்றாக முடங்கின. சினம் கொண்ட மக்கள் தடி கொண்டு போலீசை தாக்கினர். கற்களையும் சரமாரியாக வீசினர். போராட்ட வீச்சு கொழுந்து விட்டு எரியவே ராணுவமும் வரவழைக்கப்பட்டது.

மக்களும் போராட்டக்குழுவை உரு வாக்கி விட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொருளாதார விற்பன்னர்கள், வழக்கறிஞர் கள், தொழிற்சங்கங்கள், குடியிருப்போர் சங் கங்கள், இளைஞர்கள், பண்ணை விவசாயி கள், கோகோ பயிரீட்டாளர்கள் என பெரிய கூட்டணி உருவாகிவிட்டது.
 


உருவாகி விட்ட பலமான கூட்டணியை முறியடிக்க ஜனாதிபதி ராணுவ சட்டத்தைப் பிரகடனப் படுத்தினார். விளைவு, இது உள் நாட்டுப்போராக மாறி விட்டது. இதற்கு வாட் டர் வார் எனப்பெயர் சூட்டப்பட்டது. இந்தச் சொல் உலகம் முழுவதும் ஒலித்தது.

ராணுவ சட்டம் அமலுக்கு வந்து விட்ட தால் எல்லா சிவில் உரிமைகளும் ரத்தாகி விட்டன. வீதியில் நான்கு பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டது. பத்திரிகைச் சுதந்திரம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட் டது. வானொலி நிலையம் ராணுவ அதிகாரத் தின் கீழ் வந்து விட்டது. பத்திரிகை நிருபர்கள் கூட கைது செய்யப்பட்டார்கள். வீடுகள் சோதனையிடப்பட்டன.

அவசரகால அட்டூழியங்களை அட்டி யின்றி அமல்படுத்திட அரசு மூன்று பேர்களைக் கொண்ட ஓர் அதிகாரமையத்தை உருவாக்கியது.

ஜனாதிபதி யுகோ பேன்சர், ஆளுநர் (இவர் போலீஸ் தலைமை அதிகாரி, ஆளுநராக பதவி உயர்த்தப்பட்டவர்), மேயர் மேன்பிரட் ரோயல் வில்லா. இந்த மூவரின் பூர்வீக வர லாறு என்பது ஜார்ஜீயாவில் உள்ள அமெரிக்க கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். இந்த நிறுவனம் வெளிநாட்டு ராணுவ அதி காரிகளுக்கு சதி செய்து கொலை செய்வது எப்படி, சதி செய்து கலவரங்களை உருவாக்கு வது எப்படி என பயிற்சி கொடுக்கும் இடமாகும்.
 


மனிதநேயமற்ற இந்த மூவர் கொண்ட அதிகார மையத்தாலோ, ராணுவத்தாலோ, போலீஸ் அடக்குமுறையாலோ மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

செப்டம்பர் 2000ம் ஆண்டில் பொலி வியாவின் மற்றொரு நகரமான ‘லா பாஸ்’ என்ற இடத்திலும் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து 20 நாட்கள் முற்றுகைப் போராட் டம் நடந்தது. அரசாங்க அடக்குமுறையால் அங்கும் போராட்டத்தை அடக்கவே முடிய வில்லை. போராட்டத்தால் - சிவில் வார் நடந் ததின் விளைவால் அரசுக்குப் பெருத்த நட்டம் ஏற்பட்டது. மக்கள் நடத்திய சாலை முற்று கைப் போராட்டத்தில் நெடுஞ்சாலைகள் சேதாரம் செய்யப்பட்டன. அதனால் ஏற்பட்ட இழப்பு 90 மில்லியன் டாலர். விற்பனைக்கான பொருள்கள் போக்குவரத்து இன்றி தேங்கி விட்ட தால் ஏற்பட்ட நஷ்டம் 70 மில்லியன் டாலர்.

உலக வங்கி இயக்குநர் தண்ணீர் யுத்தம் பற்றி எதிர்த்து குரல் கொடுக்கிறார், சர்வதேச நிதி நிறுவன இயக்குநர் கர்ஜிக்கிறார். அத னால் எந்தப்பயனும் ஏற்படவில்லை. 2000ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய தண்ணீர் யுத்தத்தின் வீச்சால் ஒப்பந்தம் நான்கு மாதத் திற்கு மேல் நீடிக்க முடியவில்லை. ஆட் சியை பணியவைத்துவிட்டது. அந்நிய நாட்டு கம்பெனிகளுடன் போட்ட ஒப்பந்த ஷரத் துக் களை அரசு ரத்து செய்ய வேண்டியதாயிற்று.
 


அந்நிய நாட்டு கம்பெனிகள் கடையை மூடிக்கொண்டு ஓட வேண்டியதாயிற்று. வங்கியில் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை மொத்தமாக சுற்றிக்கொண்டு ஓட வேண்டியதாயிற்று. குறிப்பாக அமெரிக்க கம் பெனி பாச்டட் பொலிவிய அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை 1,50,000 டாலரை பட்டுவாடா செய்யாமலேயே பறந்து போய் விட்டது. மாறாக இந்த கம்பெனி தனக்கு நஷ்ட ஈடாக 12 மில்லியன் டாலர் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. நஷ்ட ஈடாவது, மண்ணாவது, அடித்த கொள்ளை போதாதா? ஒரு வாய் தண்ணீருக்கும் காசு கேட்ட கம் பெனியை ஓட ஓட விரட்டி வெளியேற்றியதும் ஒன்றுதிரண்ட மக்கள் எழுச்சியே. அமெரிக் காவிற்கு தாசானு தாசானாக நடந்து கொண்ட பொலிவியாவின் சர்வாதிகாரியை பணிய வைத்ததும் மக்கள் எழுச்சியே. நடந்த போராட் டமோ 7 நாட்கள்தான். இது ஓர் அற்புதம், அதி சயம். அடுத்து அந்த மக்கள் தண்ணீர் யுத்தத் தில் கண்டு கொண்ட மற்றொரு அனுபவம் -

‘நாங்கள் பெற்ற இந்த வெற்றி உறுதிப்பட வேண்டுமென்றால், தாராளமயத்தை, தனியார் மயத்தை அமல்படுத்தும் ஆட்சியை மாற்ற வேண்டும், இந்த நாசகர கொள்கையை எதிர்க்கும் ஒரு மற்றொரு ஆட்சியை உரு வாக்கிட வேண்டும். இதில் நாங்கள் தெளி வாக உள்ளோம்’ என்றார்கள்.

ஆம், ஆட்சி மாற்றப்பட்டது.அங்கு இடது சாரி ஆட்சி பீடம் ஏறியுள்ளது.

பொலிவியா, இந்திய மக்களுக்கு தெரி விக்கும் படிப்பினையும் இதுதான்.
இது தண்ணீரை வைத்து அரசியல் நடத்த தயாராகும் காங்கிரசுக்கும் நல்ல படிப்பினையைத்தரும்.
                                                                                                                                                        கட்டுரை உதவி:நன்றி;தீக்கதிர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: http://suransukumaran.blogspot.in/2012/02/blog-post_27.html