Friday, July 4, 2014

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...

சவாலை ஏற்குமா ஜோதிடம்?



நூல்: சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை
ஆசிரியர்: சிந்தனையாளர்: பேரா.ஏ.எஸ்.நடராஜ்
தமிழ் மொழியாக்கம்: பகுத்தறிவுப் பாவலர். வீ.இரத்தினம், பெங்களூரு.
பக்கங்கள்: 108  |  விலை: ரூ.10  |  வெளியீடு: தங்கம் இராமச்சந்திரா
நூல் கிடைக்குமிடம்: வீ.இரத்தினம்,
1157, 11ஆவது மெயின் ரோடு, ஹம்பி நகர்,
பெங்களூரு - 560 014.  செல்பேசி: 94498 80117.

மிகப்பெரிய ஜோதிட குடும்பத்தில் பிறந்து ஜோதிடத்தை நன்கு கற்று தொழில் நடத்தி, ஆயிரக்கணக்கான ஜாதகம் எனப்படும் பிறந்த நாள் குறிப்புகளை எழுதி, ஒரு காலத்தில் அதையே நம்பி அதில் ஆய்வு செய்த பிறகு ஜோதிடம் பொய் என்னும் உண்மையை அறிந்துகொண்டு அதைத் துணிவுடன் வெளிச் சொன்னதோடு மட்டுமல்லாமல், ஜோதிடம் உண்மை என்று மெய்ப்பிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தருவதாக அறைகூவல் விடுத்துள்ளவர் பேராசிரியர் ஏ.எஸ்.நடராஜ். விரிவான அவருடைய ஜோதிடத்திற்குச் சாவல் என்ற நூலைத் தொடர்ந்து, அதைவிடக் கூர்மையாக ஜோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை என்ற நூலை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவமே இந்நூல். பாராட்டுக்குரிய வெளியீடான இந்நூலிலிருந்து சில பகுதிகள்...
as_natraj
சில பலசோதிடம் (பலன் கூறல்) வெற்றி / தோல்வியாவதன் இரகசியம் -
1. சோதிடர்களின் சில முற்குறிப்பு Prediction) உண்மையாவது எப்படி? என்று கேட்கிற கேள்விகளில் இரகசியம் இருக்கிறது?
சோதிடம் பொய், அறிவியல் அல்ல என்பதே விஞ்ஞானிகள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் ஆகியோரின் வாதம்: சோதிடம் பொய் மற்றும் அறிவியல் அற்றது. சில சோதிடர்களின் சில முற்குறிப்புகள் உண்மையாவது சோதிட சாத்திரத்திலிருந்து அல்ல. சோதிடம் தெரியாதிருந்தாலும் பலன் சொல்கிறவனுடைய கீழ்க்கண்ட சிந்தனையிலிருந்து சில உண்மைகள் நடக்கக் கூடியனவே!
i.. கேள்வி விதி, ii. திறன், iii. அனுபவம், iv. வாக்குச் சாதுரியம், v. சாதகனின் மனநிலை, vi. சாதாரண அறிவு மற்றும் vii. வாய்ப்பும் திறமைமிக்க ஊகமும் ஆகிய ஏழு கூறுகள் (அம்சங்கள்) மீது சோதிடம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல் வேறுஎந்த ஆதாரத்தின் மீதும் இது நடப்பதில்லை. எ.கா: கண்கட்டி வித்தைகள் மந்திரத்தின் மேல் அல்லாமல் உண்மையில் அது அவன் செய்யும் தந்திரத்திலும் அவனது கைச் சாதுரியத்திலும் இருக்கின்றது. அதைப் போலவே பலன்கள் சோதிடத்தில் இல்லை, சோதிடனின் திறமையில் இருக்கின்றன. சில சோதிடர்கள் சிலருக்குச் சொல்லும் சோதிடங்களில் ஒரு சிலவே உண்மையாகின்றன.
அந்த சில சோதிடம் உண்மையாவது சோதிடம் உண்மை என்ற காரணத்திற்காக அல்ல. சூழ்நிலைக்கேற்றபடி ஊகிக்கும் அவனது திறன், இருமுறை சொல்வதில் யாரும் எதிர்பார்க்காதபடி உண்மையைத் தேர்ந்தெடுக்கும் அவனது அனுபவ நுண்ணறிவு ஆகியவைகளே சோதிடம் உண்மையாவதற்கான காரணங்களாகும்.
1. கேள்வி விதி - சோதிடர்கள் கேட்கும் கேள்விகளில் அமைந்திருக்கும் திறன்.
கேள்வி அதிகப்படியான சோதிடர்களை வெற்றி பெறச் செய்ய பெரும் உதவியாக இருக்கிறது. வெற்றியின் இரகசியத்தை மக்கள் அறிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அது எப்படி என்றால்:
1.1.  50 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம்:-
சோதிடரிடம் வந்து சோதிடம் கேட்பவர்கள் எல்லோரும் அதிகமாக இரு கருத்துகளடங்கிய கேள்விகளைக் கேட்கிறார்கள். எ.கா: காரியத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால் ஆகுமா, ஆகாதா? வெற்றி _ தோல்வி தொடர்புடையதானால் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? மங்கள காரியமானால், நடக்குமா, நடக்காதா? படிப்பு தொடர்புடையதானால் தேர்வில் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? (பாசா _ பெயிலா), நலம் கிட்டுமா _ நலம் கிட்டாதா? ஈட்டமாகுமா _ இழப்பு ஏற்படுமா? இப்போது காலம் நன்றாக இருக்கிறதா _ இல்லையா? திருமணம் இப்போது நடக்குமா _ நடக்காதா? குழந்தை ஆணாகப் பிறக்குமா _ பெண்ணாகப் பிறக்குமா? பொதுத் தேர்தலில் இந்தத் தடவை காங்கிரசுக் கட்சி வருமா _ பா.ஜ.க. வருமா? இப்படி இரண்டு பதில்கள் இருப்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாக உள்ளது. இந்தக் கேள்விகளில் எப்போதும் சோதிடம் பாதி மெய் _ பாதி பொய் (பஞ்சபவேத் _ பஞ்ச நா பவேத்) என்பதைப் போல 50 விழுக்காடு முற்குறிப்பு உண்மையாகிறது.
1.2. சோதிடம் 100 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம். எ.கா:-
தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று வருமா? பா.ஜ.க. வருமா? அவன் முதலமைச்சர் ஆவானா _ இல்லையா? இந்தக் கேள்விகளில் சில சோதிடர்கள் பா.ஜ.க. என்று சொல்கிறார்கள். சிலர் காங்கிரசு என்கின்றனர். அப்பொழுது எந்தக் கட்சி வந்தாலும் அப்படிச் சொன்ன சில சோதிடர்கள் வெற்றி பெற்றவர் ஆகின்றனர். காரணம், வந்த கட்சி வெல்லும் என்று சொன்ன சோதிடர்கள் இருக்கிறார்கள் அல்லவா? யாரோ சோதிடர்கள் சொன்னது உண்மையாகுவதானது சோதிடம் உண்மையானதைப் போல ஆனதல்லவா? அப்படி ஆவது ஒவ்வொரு தேர்தலிலும் யாரேனும் சோதிடர்களின் முற்குறிப்புகள் உண்மையாவதனால்தான்!
1.3. நீண்ட கால தீர்மானத்திற்கான கேள்விகள்:-
நடந்தாலும் உண்மை, நடக்காவிட்டாலும் உண்மையே! எ.கா: எனது மகளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அதற்கு பதில்: தற்போது 3 திங்கள் கிரகபலன் இல்லை. இப்போது திருமணம் நடப்பது சற்று கடினம். 4லிருந்து 6 திங்களுக்குள் நடந்தால் நடக்க வேண்டும். இல்லையானால் இரண்டு ஆண்டுகள் வரை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதன் பிறகு கண்டிப்பாக ஆகும். இப்படி நீண்டகால பவிஷியம் (எதிர்கால பலன்) சொல்லும்போது சிலருக்கு நடந்தே நடக்கும்.
1.4. சரியாகச் சொல்வதில் சோதிடர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் அப்படிச் சொல்வது பொய்யாகி விடுகிறது. எ.கா:
எனது மகனுக்கு எந்தத் திங்கள் எந்த நாளில் திருமணம் நடக்கும்? எங்கள் பாட்டி எந்த ஆண்டு, எந்தத் திங்கள், எந்த நாளில் இறப்பாள்? எனது மனைவிக்கு எந்த நாளில் மகப்பேறு (பிரசவம்) ஆகும்? எனக்கு பதவி உயர்வு எந்த ஆண்டு, எந்த நாளில் கிட்டும்? தேர்தலில் பேராயக் கட்சி (காங்கிரசு) எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும்? பா.ஜ.க. எவ்வளவு இடங்களைப் பிடிக்கும்? ஒரு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் எவ்வளவு வாக்கில் வெற்றி பெறுவார்? எந்தக் காலத்தில், எந்த நேரத்தில் நேர்ச்சி (விபத்து) நிகழும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைவு. அப்படி ஏதாவது ஒன்றோ இரண்டோ உண்மையாக இருக்குமானால் அது தப்பித் தவறி இருப்பதே அல்லாமல் சோதிடனின் தந்திரத்திலிருந்து ஆனதல்ல.
1.5. எதிர்கால பலன் (பவிஷியம்) - Prediction) சொல்லும் காலத்தின் கேள்விகள்:
இதை எந்த சோதிடனும் சரியாகச் சொல்வது இல்லை. ஊகத்தினால் சொல்வது ஏதோ ஒரு சமயத்தில் உண்மையாகி விடலாம். நீங்கள் ஆய்விலும் பார்க்க வேண்டுமானால் 1 திங்களில் அல்லது 3 திங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி பற்றிய கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள்.
1.6. இறந்தகால கேள்விகள்
அங்கே கூட முன்பே சொன்ன எல்லா தந்திரங்களும் பயன்பாட்டிற்கு வருகின்றன. இந்த எல்லா பின்னணியிலும் சில சோதிடர்களின் சில குறிப்புகள் உண்மையாகின்றன.
1.7. சோதிடர்கள் அல்லாத பிறர் எவ்வளவோ எதிர்கால பலன் சொல்கிறார்கள். இந்தக் கேள்விகளை எல்லாம் அவர்களிடம் கேட்டால் சோதிடம் தெரியாத அவர்கள் சொல்லும் எதிர்கால பலனில் சில சரியாக இருக்கும். சில தடவை சோதிடர்கள் சொல்வதைவிட இன்னும் நன்றாகவே சொல்வார்கள். இதனால் எதிர்கால பலன் உண்மையாகுவது சோதிடத்திலிருந்து அல்ல, புத்தி கூர்மையான சோதிடனின் மோசம் செய்யும் திறமையினாலும் தந்திரத்தினாலுமே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
2. சோதிடரின் திறமை - புத்தி சாதுரியம், அனுபவம், சந்தர்ப்பம்.
பல சோதிடம் பல சோதிட நூல்களில் சொல்லப்பட்ட சில கூறுகளை (அம்சங்களை) உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னணியில் சிலர் வெறும் ஊகத்தின் மேல் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வெறும் சாதகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலையின் ஊகத்தை சோதிடரின் புத்திசாலித்தனம், அனுபவங்களின் பின்னணியில் சில தடவை சரியாகச் சொல்லி விடுகின்றனர்.
3. அனுபவம் - சோதிட அனுபவம் அதிக வேலை செய்கிறது. சொல்லிச் சொல்லி என்ன செய்ய வேண்டும் என்னும் திறமை தெரிவிக்கிறது.
சோதிடரின் வெற்றிக்கு சோதிடத்தில் அவர் முன்பே சொல்லிச் சொல்லிப் பெற்றிருக்கும் அனுபவம் மிகவும் உதவிக்கு வருகிறது. பாடிப்பாடி பாடகன் ஆகு என்று சொல்லும் பழமொழி போல பொய்யை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் இறுதியில் பொய்யே ஒரு தடவை உண்மையாகி விடுகிறது.
4. வாக்குச் சாதுரியம் - இதுவே சோதிடனின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திறமையாகப் பேச வராதவன் சோதிடனாக இருக்க மாட்டான். இருக்க முடியாது.
இது சோதிடனின் வெற்றிக்கு முதன்மையானதாக இருக்கிறது. ஈர்க்கும்படியான பேச்சு, சொல்லுக்குச் சொல் சுலோகங்கள் சொல்வது, இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் சில மேற்கோள் சொல்வது, பலன் சொல்லும்போது குறுக்குச் சுவற்றின் மீது விளக்கு வைத்ததைப் போல சொல்வது ஆகிய இவை யாவுமே மிக மிக உதவிக்கு வருகின்றன. வாக்குச் சாதுரியமே சோதிடம் சொல்வதில் இருக்கும் உயிர். சோதிடம் சொல்பவனுக்கு சோதிடம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடம்பரம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
5. சாதகனின் மனநிலை அறிந்து கொள்ளல்
சாதகனின் மனநிலை, துக்கம், கவலை, அச்சம், நிறைவேறாத ஆசை, பிற ஆசைகள் முதலிய மனத்தின் நிலைமையை சோதிடன் பயன்படுத்திக் கொண்டு ஊகம் செய்கிறான். திறமையான ஊகம் சில சமயம் உண்மையாகலாம்.
6. சாமானிய அறிவு
சோதிடனின் சாமானிய அறிவு, விஞ்ஞான அறிவு, சமூக மற்றும் குடும்ப அறிவு ஆகிய அனைத்துமே சோதிடம் சொல்பவனுக்கு முன்வந்து கை கொடுத்து உதவுகின்றன. சந்தர்ப்பம், சூழ்நிலையை அறிந்து அதற்குத் தகுந்தபடி பவிஷியம் சொல்பவன் வெற்றி பெறுவான். பலதுறை அறிவு படைத்த ஒருவன் சோதிடம் சொல்வதில் சிறந்து விளங்குவான்.
7. சந்தர்ப்பம் அறிய வல்லவனின் ஊகம்
நிலைமை, சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவைகளைத் திறம்பட அறிந்து கொண்டு திறமையாக ஊகம் செய்வதில் வல்லமையுடைய சோதிடன் அதிகமாக வெற்றி பெறுகிறான்.
8. எந்த சோதிடனும் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே சொல்வதில்லை. ஒருவேளை சொன்னால்கூட குறுக்குச் சுவற்றின் மேல் இட்ட விளக்கு நாலா பக்கமும் ஒளி கொடுப்பதைப் போல அது எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துமாறு சொல்வதாக இருக்கும்.
அதிகப்படியான சோதிடர்கள் நிகழ்ச்சி, சம்பவம், விளைவுகள் ஆகியன இயற்கையாக நடந்ததன் பிறகு அவைகள் எப்படி நடந்தனவென்று ஆய்வு செய்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சி நடப்பது, வெற்றி _ தோல்வி ஏற்படுவது, வியாதி வருவது _ அது குணமாவது, விபத்து உண்டாவது, இலாப _ நட்டம் ஏற்படுவது ஆகியன பற்றி முன் கூட்டியே உறுதியாக உரைக்கும் சோதிடர் இல்லவே இல்லை. ஒருவேளை சொன்னாலும், குறுக்குச் சுவற்றின் மேல் விளக்கு ஏற்றி வைப்பதைப் போல சொல்கின்றனர்.
9. பல சோதிடம் பொய்யான அனேக எடுத்துக்காட்டுகள்
சில சந்தர்ப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை வெளிக்கொண்டு வருவதற்குப் பரப்புரை செய்யப்படுவதில்லை. விஞ்ஞானமில்லாத, உண்மை இல்லாத, தர்க்கத்திற்கு உட்படாத மற்றும் மயக்கம் (பிரமை) என்று மேலே சொல்லப்பட்ட எல்லாம் நிரூபணங்களால் தெளிவாகி உள்ளன. அவ்வளவின் மேல் சோதிடத்தை உண்மையாக்கிக் காட்டுகிறேன் என்பவர் என்னுடைய ஒரு சாதகத்தின் மேல் கேட்கும் 10 கேள்விகளில் 8 கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுத்து உண்மையை மெய்ப்பித்து ரூபாய் ஒரு கோடியைப் பரிசாகப் பெறலாம். சவாலை ஏற்றுக் கொள்ளும் எந்தத் தனிப்பட்ட மனிதரானாலும் அல்லது குழுவானாலும் கீழ்க்கண்ட எனது கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விவரம் பெறுக.
10. சவால் 1: 1 கோடி
பவிஷியம் _ இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் ஒரு சாதகத்தின் மீது கேட்கும் 10 கேள்விகளில் 80 விழுக்காடு சரியான பதிலுக்கு ரூபாய் ஒரு கோடி சவால். இது சரியாக எதிர்கால பலன் சொல்லும் தைரியசாலிகளுக்குக் கொடுக்கப்படும். ரூபாய் ஒரு கோடி சவாலின் விவரங்கள்:
இந்த ரூ. ஒரு கோடி சவாலுக்குக் கொடுக்கப்படும் சாதகம் ஒரே ஒரு சாதகம் மட்டுமே. அப்படிக் கொடுக்கப்படும் ஒரு சாதகத்தின் மேல் 10 கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகள் முதலிலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சரியான கேள்விகளாக இருக்கும். எந்த விதம் மற்றும் எந்த விடயங்களுடன் தொடர்புடைய கேள்விகள் என்பது பற்றிய விவரங்கள், அத்துடன் தீர்மானிக்கப்பட்ட கேள்விகள் எவை மற்றும் அவைகளுக்கான பதில்களை எப்படித் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த 10 கேள்விகளில் (ஏ _ பாகம்) 1 முதல் 6 கேள்விகள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால், (பி _பாகம்) கேள்வி 7 முதல் 10 வரையிலான 4 கேள்விகள் 3 திங்கள் பவிஷிய காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சி பற்றிய கேள்விகளாக இருக்கும். சோதிடர்கள் எதிர்கால பலன் சொல்பவராக இருப்பதனால் அவர் குறிப்பிடும் காலத்தில் நடக்கும் கேள்விகள் மிக முக்கியமாக இருக்கின்றன. அதிகப்படியான சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷியம் 80 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை சரியானது என்று சொல்லிக் கொள்வதால் அவர்கள் சொல்வதைப் போலவே நாம் அவர் சொல்லும் எதிர்கால பலன் 80 விழுக்காடு மற்றும் அதைவிட அதிகம் சரியான பதில் சொல்பவருக்கு ரூபாய் ஒரு கோடி பரிசைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
அந்த 80 விழுக்காடு எப்படி இருக்க வேண்டு மென்றால் ஏ _ பாகத்தில் _ அப்படி என்றால் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேலுள்ள 6 கேள்விகள் குறைந்தது 5 எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும். இப்படி 5 கேள்விக்கான பதில்களில் ஒரு கேள்விக்கான பதில் தப்பானாலும் 5 கேள்விக்கான பதில்களும் தப்பு என்றே அறிவிக்கப்படும்.
பி பாகத்தில் அதாவது கேள்வி 7லிருந்து 10 வரையிலான பவிஷிய கால 3 திங்களுக்குள் நிகழும் சம்பவம் தொடர்பான 4 தீர்மானமான கேள்விகளில் குறைந்தது 3 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கொடுக்க வேண்டும். இப்படி 10 கேள்விகளில் குறைந்தது 8 கேள்விகளுக்கு (80%) சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகள் எளிதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கும். இறந்த மற்றும் நிகழ்காலம் பற்றிய கேள்விகள் அனைத்துமே எளிதாகவும் மற்றும் சாதாரணமானதாகவும் இருக்கும். சோதிடத்தில் கேட்கப்படும் கேள்விகள் கூட 3 திங்களுக்குள் நிகழக் கூடியதான சாதாரண கேள்விகளாக இருக்கும். ஆயுள் காலம், மரணம், தனயோகம், திருமணம், மக்கள் பேறு முதலான நீண்ட காலத்தில் நிகழும் சம்பவங்கள் பற்றிய கேள்விகள் இல்லை. மிகுதியான நன்னடத்தை, ஊர்திகள் (வாகனம்) வாங்குதல், வழிபாட்டு இடங்களுக்குப் பயணம் செய்தல் ஆகியவைகளின் மேல் கேள்விகள் இருக்கும்.
சவால் 2:  ரூ. 10 இலக்கம்
வெறும் இறந்த காலத்தின் மேல் மற்றும் 10 சாதகங்களின் மேல் வெறும் 3 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில்களின் மேல் ரூ.10 இலக்கம் சவால். இது பவிஷியம் சொல்வது பற்றி அதைரியப்படும் பயந்தாங் கொள்ளிகளுக்காக. சில சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷிய வாணியில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்வது நடக்கக் கூடியதல்ல. நீங்கள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் கேள்வி கேட்டு நூற்றுக்கு நூறு உண்மையைச் சொல்கிறோம் என்று சொல்கிறீர்கள். அந்த அச்சப்படும் சோதிடர்களுக்காக இந்தச் சவாலை இப்போது விடுக்கிறேன்.
10 சாதகங்களின் மேல் வெறும் 4 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதிலுக்குச் சவாலாக நான் 10 சாதகங்களைக் கொடுக்கிறேன். அந்த சாதகங்களின் மீது பின்வரும் கேள்விகள் கேட்கப்படும்.
கேள்வி 1: எந்த சாதகர் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்? எந்த சாதகர் இப்பொழுது மரணமடைந்தவர்? இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும்.
கேள்வி 2: அந்தச் சாதகங்களில் எந்தச் சாதகம் பெண்ணுக்குரியது, எந்தச் சாதகம் ஆணுக்குரியது என்று சொல்ல வேண்டும்.
கேள்வி 3: அந்த பத்து சாதகங்களில் எந்தச் சாதகருக்குத் திருமணம் ஆகி இருக்கிறதோ அவருடைய முதல் திருமண காலம் அதாவது திருமண நாள், திங்கள், ஆண்டு ஆகியவைகளைத் தெரிவிக்க வேண்டும்.
கேள்வி 4: சாதகன் படித்த படிப்பு அதாவது பத்து சாதகத்தில் யார் எந்த வகை பல்கலைக்கழக பட்டம் அல்லது அதை விடவும் அதிகம் படித்திருந்தால் அப்படி அதிகம் படித்துப் பெற்ற பட்டம் குறிப்பிட வேண்டும். சான்று அளிக்கப்பட வேண்டும். (டிப்ளொமா மற்றும் அதைவிடக் குறைந்த கல்வியைக் கணக்கில் எடுக்கக்கூடாது.) பட்டப்படிப்பு அல்லது அதைவிட அதிகப் படிப்பு படித்தவரை மட்டும் சொல்ல வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் ரூ.10 இலக்கம் வெகுமதி இருக்கிறது. ஒவ்வொரு சாதகத்தின் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் ((Column) வீ. வாழ்பவர் / இறந்தவர், வீவீ. பெண் / ஆண், வீவீவீ. திருமணம் ஆகியிருந்தால் திருமணமான நாள், திங்கள் மற்றும் ஆண்டு கிறித்தவ காலண்டர் (நாள்காட்டி)படி, திருமணம் ஆகவில்லையானால் ஆகவில்லை என்று, வீஸ். பட்டம் பெற்றவர் / பெறாதவர் போன்ற விவரங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான விவரங்களுக்கு மூடத்தனம் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் (மௌடிய மத்து வைச்சாரிகே) என்ற கன்னட நூலில் சோதிடத்திற்கு ரூபாய் கோடி சவால் என்னும் அத்தியாயம் படிக்கவும்.



பொய்யான ஜோதிடர்கள்
பலசோதிடங்கள் (பலன் சொல்லும் சோதிடங்கள்) அதிகமான தடவைகளில் பொய்யாய்ப் போனதற்கான பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. இங்கே சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.
11.1. 1982இல் எக்கனாமிக் டைம்சில் வைசம்பாயா என்னும் சோதிடர் எழுதிய பல சோதிடம் முற்றிலும் பொய்யாகி விட்டது.
11.2. 1983இல் ஜகஜித்பால் என்பவர் சன்டே அப்சர்வர் என்ற வார இதழில் தூமகேது மற்றும் கிரகண பலத்தைப் பற்றி பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று தீர்மானமாகச் சொன்னது எதுவும் நடக்கவில்லை.
11.3.: அஷ்ட்ட கிரகங்களின் (8 கிரகங்கள்) யோக சம்பந்தம் குறித்து எல்லா சோதிடர்களும் ஆபத்து, நாசம், கேடு, வெள்ளம், தீ, பூகம்பம், போர் முதலியன நடக்கப் போகின்றன என்று பெரும் பரப்புரையைச் செய்தார்கள். ஆனால் அஷ்ட்ட கிரகம் அமைதியாக வந்து போனது. யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
11.4: இராஜீவ் காந்தியின் கொலையைப் பற்றி எந்த ஜோதிடனும் முன்னதாகச் சொல்லவே இல்லை. கொலையுண்ட பிறகு நான் முன்பே சொல்லி இருந்தேனே என்று சொல்லத் தொடங்கினார்கள்.
11.4.1: 21, மே, 1991இல் இராஜீவ் காந்தியின் கொலை ஆனது. கொலையாகும் முன்பு மே, 1991இல் இல்லஸ்ட்ரேட் வீக்லியின் 1991க்குப் பிறகு இராஜீவ் காந்தி இந்த நாட்டின் முக்கிய தலைவராகி ஆட்சி நடத்துவார் என்று எழுதியது.
11.4.2: 1991 மே திங்களுக்கு முன்பே இந்த நாட்டின் மிகையான பத்திரிகைகள், அதிகப் படியான சோதிடர்கள் இராஜீவ் காந்திக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பல ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுவார் என்று சொன்னார்கள்.
11.4.3: புகழ்பெற்ற சோதிடர் கே.எஸ்.சரஸ்வதி இதையே ஆதரித்தார்.
11.4.4: புகழ்பெற்ற சோதிடர் பி.கே.சக்கரவர்த்தி 1991க்குப் பிறகு இராஜீவ் காந்திக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று எதிர்கால பலன் சொன்னார்.
11.4.5: மற்றொரு புகழ்பெற்ற சோதிடர் ஏ.கே.இராசா என்பவர் அதே சந்தர்ப்பத்தில், இராஜீவ் காந்தி 10ஆவது லோக்சபை (மக்கள் அவை) ஆளும் கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து அவருடைய தலைமையில் முழுமையாக அய்ந்து ஆண்டுகள் அவர் இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருப்பார் என்று  எதிர்கால பலன் சொன்ன இரண்டாவது வாரத்திலேயே அவரது படுகொலை நிகழ்ந்துவிட்டது.
11.4.6: வந்தனா முண்டேல்கர் என்ற வேறொரு சோதிடர் இராஜீவ் காந்தி சாவது தெரிந்திருந்தது; ஆனால் தான் வேண்டுமென்றே சொல்லவில்லை என்று கனமானதொரு பொய்யை அனுப்பினார்.
11.4.7: இன்னுமொரு சோதிடர் கே.என்.ராவ் என்பவர் இராஜீவ் காந்திக்கு சாவு வருவது தனக்கு முதலிலேயே கட்டாயம் தெரியுமென்றும் அதனால்தான் இராஜீவ்காந்தி 1991 சூலையிலிருந்து ஆகஸ்ட் நடுவிற்குள் இறப்பார் என்றும் தெரிவித்தேன் என்றும் கணக்கு கொஞ்சம் தப்பியதால் அவருடைய இறப்பு சற்று வேகமாகவே வந்துவிட்டது என்றும் பெரிய இரயில் விட்டார்.
இப்படியே தேர்தல் பற்றி, மந்திரி பதவிகள் பற்றி, ஆளும் கட்சிகள் பற்றி, இடங்கள் பற்றி ஒவ்வொரு தேர்தலிலும் இந்தச் சோதிட இரயில் விடும் சோதிடர்கள் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விடும் இரயிலுக்கு தண்டவாளமும் இல்லை, சக்கரங்களும் இல்லை. இருந்தாலும் அவர்களது சோதிட இரயில் அப்பாவிகள், மூடர்கள் ஆகியோர் மீது ஓடுகிறது.
(நூலிலிருந்து...)
நன்றி : http://www.unmaionline.com/new/2066-books.html

செய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி !

டந்த மே 29 அன்று முகேஷ் அம்பானியின் 4 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடைய ரிலையன்ஸ் நிறுவனம், ராகவ் பால் எனும் தரகு முதலாளிக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்தை வாங்கியுள்ளது.
ராகவ் பால்
ராகவ் பால்
இதன் மூலம் நெட்வொர்க்-18 கட்டுப்பாட்டில் உள்ள பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி சி.என்.என்-ஐ.பி.என், வணிக தொலைக்காட்சி சி.என்.பி.சி-டிவி18, ஃபோர்ப்ஸ் இந்தியா, கலர்ஸ் தொலைக்காட்சி, ஈநாடு குழும தொலைக்காட்சிகள் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊடகங்களை நேரடியாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார் முகேஷ் அம்பானி.
ஊடகங்களை கைப்பற்றும் முகேஷ் அம்பானியின் முயற்சி 2008-லேயே தொடங்கியது. அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்த, ராமோஜி ராவ் குழுமத்துக்கு சொந்தமான ஈநாடு தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குகளை சுமார் 2,600 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் வாங்கியது. ரூபாய் 525 கோடி மதிப்பிடப்பட்டிருந்த ஈநாடு  நிறுவனம், 2007-08ம் நிதியாண்டில் 56.6 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இந்நிறுவனத்தின் பங்குகளைத்தான் ஒரு பங்குக்கு ரூ 5,28,630 விலைக்கு ரிலையன்ஸ் வாங்கியது.
நிறுவனத்தின் மதிப்பீட்டை விட 5 மடங்கு அதிக தொகை கொடுத்து ரிலையன்ஸ் அதை வாங்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், வெளியாகியிருக்கும் இந்த பரிமாற்றத்தோடு வெளியில் தெரியாத பல மறைமுக பரிமாற்றங்கள் இருக்கலாம் என்றும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்று வாசகர்கள் யாருக்காவது தெரிந்தால் அறியத் தாருங்கள்.
இந்த காரணத்தை சொல்லி ஈநாடு நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கிய இந்த பரிமாற்றம், 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் அமலாக்க பிரிவின் விசாரணையின் கீழ் வந்தது.
இந்நிலையில்தான் ரிலையன்ஸ் தன் வசமிருந்த ஈநாடு தொலைக்காட்சியின் பங்குகளை, ராகவ் பாலுக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்துக்கு ரூ 2,053 கோடிக்கு விற்று விட்டது. ராகவ் பாலின் ஊடக நிறுவனங்கள் அப்போது நிதி இழப்புகளை சந்தித்து கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
ராகவ் பால் நிறுவனங்கள் கடனிலிருந்து மீளவும், ஈநாடு தொலைக்காட்சியில் ரிலையன்சின் பங்குகளை வாங்கவும் கடனுதவியளித்தது இண்டிபென்டன்ட் மீடியா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை. இந்த கடனுக்கு கைமாறாக நெட்வொர்க்-18 மற்றும் டி.வி-18-ன் தகவல் உரிமங்களையும், ஈவு பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய பத்திரங்களையும் பெற்றுக்கொண்டது அந்த அறக்கட்டளை.
ஆனால், அந்த அறக்கட்டளையை இயக்குவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸேதான். இதன் மூலம் ஈநாடு தொடர்பான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ததோடு நெட்வொர்க்18 குழுமத்தையும் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிலையன்ஸ். நெட்வொர்க்18-ன் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களில் அம்பானிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள், செய்திகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு நிர்ப்பந்தம் கொடுத்தனர். அதனால் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்புடைய பல கட்டுரைகள் வெளியிடப்படாமல் கைவிடப்பட்டன.
இந்நிலையில்தான், இண்டிபென்டன்ட் மீடியா அறக்கட்டளை வசம் இருந்த கட்டுப்பாட்டை பயன்படுத்தி நெட்வொர்க் 18-ன் 78% பங்குகளையும், டிவி18-ன் 9% பங்குகளையும் சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு வாங்கி அந்நிறுவனங்களை ரிலையன்ஸ் தனது நேரடி ஆதிக்கதிதன் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முர்டோசின் ஸ்டார் குழுமத்தைவிட அதிக எண்ணிக்கையிலான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.
ஏற்கனவே தனது மறைமுக கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அம்பானியின் இயற்கை எரிவாயு ஒதுக்கீடு விவகாரத்தை கொண்டு ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், நடப்பது “குரோனி கேப்பிடலிசம்” என்று விமர்சித்திருந்தார். இதை மற்ற ஊடகங்கள் பரபரப்பு செய்திகளாக வெளியிட்டு கொண்டிருந்த போது நெட்வொர்க்18 குழும தொலைக்காட்சிகளும் செய்தி என்ற வகையில் வெளியிடத்தான் செய்தன.
ராமோஜி ராவ்
ராமோஜி ராவ்
தனது கட்டுப்பாட்டிலிருக்கும் சேனல்களில், ரிலையன்சுக்கு எதிரான கருத்துகள் இடம் பெறுவதை கூட ரிலையன்ஸ் விரும்பவில்லை. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரங்களையும், விமர்சனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும், அம்பானி தரப்பு வாதங்களை செய்திகளாகவும், நிகழ்ச்சிகளாகவும் முன் வைக்க வேண்டும் என்றெல்லாம் ரிலையன்ஸ் கோரியிருக்கிறது. ஆனால், அதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
எனவே, தனக்குத் தேவையான ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் எந்த ஒரு திரை மறைவு அல்லது ஒளிவு மறைவும் தேவையில்லையென களத்தில் குதித்துவிட்டார் அம்பானி.
நெட்வொர்க் 18-ஐ ரிலையன்ஸ் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து நெட்வொர்க்18-ன் ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் அனைவரும் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர். சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தலைமை தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அவரது மனைவியும் தொகுப்பாளருமான சகாரிகா கோஷ் இருவரும் வேலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ராஜ்தீப் சர்தேசாய்
ராஜ்தீப் சர்தேசாய்
இனி தமிழ்நாட்டில் ஜெயா டிவி ஜெயலலிதா புகழ் செய்திகளையும், கலைஞர் டிவி கருணாநிதி புகழ் செய்திகளையும் ‘நேர்மையாக’ வழங்குவது போல அம்பானிக்கு சொந்தமான ஊடகங்கள் ரிலையன்சின் புகழ் பரப்பும் நிகழ்ச்சிகளை தயாரித்து இந்தியா முழுவதும் வெளியிடும். மிகவும் திறமையான தொழில்முறை ஊடகவியலாளர்கள் மூலம் அவை விளம்பரம் என்று தெரியாதபடிக்கு பார்வையாளர்களுக்கு கடை விரிக்கப்படும். சி.என்.என்-ஐ.பி.என் அம்பானி சேனல் ஆக செயல்படுவது போல எதிர்காலத்தில் பிற ஊடகங்களும் நேரடி கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் செய்திகள் தமக்குள் போட்டி போடுவதை கண்டு களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படும்.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காகவே கட்டியமைக்கப்பட்ட அரசு அமைப்பிலும் நேரடியாக முதலாளிகளின் நேரடி தலையீடு வளர்ந்து வருவதைப் போல, ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகங்களிலும் கார்ப்பரேட்டுகளின் நேரடி சாம்ராஜ்யங்கள் உருவாகி வருகின்றன.
இந்திய அரசின் பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அம்பானியின் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று விடும் என்பது புது தில்லி பத்திரிகையாளர்களிடம் நிலவும் பிரபலமான பழமொழி. இனி தில்லி பத்திரிகையாளர்கள் எழுதும் செய்தி அம்பானியின் மேசைக்கு சென்று அனுமதி பெற வேண்டும் என்ற புது பழமொழி உருவாக வேண்டும் போலிருக்கிறது!

நன்றி : http://www.vinavu.com/2014/07/01/reliance-takes-direct-control-of-tv-18/

Thursday, July 3, 2014

ஆதிசங்கரன் X விவேகானந்தர்



இவர்தான் விவேகானந்தர்
உலகின் எல்லா மதங்களிலும் உலகம் சார்ந்த செயல்கள் (கர்ம காண்டம்) மெய்ப்பொருள் சார்ந்த செயல்கள் (ஞான காண்டம்) என்று இரு பகுதிகள் உண்டு. மக்களுக்கான பிரச்சினை இருப்பது உலகு சார்ந்தவை பற்றியே தவிர, மெய்ப்பொருள் சார்ந்த விசயங்களில் அல்ல. கொச்சையாகச் சொன்னால், அன்ன விசாரமே பெரும் விசாரம். தத்துவ விசாரம் பண்டாரப் பரதேசிகளுக்கானது. அவர்களைப் பற்றிய விவேகானந்தரின் கருத்து துல்லியமானது. (கருத்துகள் தொகுதி 8, பக்கம் 290).
கெட்டவர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆகிய புரோகிதர்கள் அனைத்து வகை மூடநம்பிக்கைகளையும் வேதங்களின் சாரம் என்றும் இந்து மதத்தின் சாரம் என்று கூறிப் பிதற்றுகிறார்கள். இந்தப் போக்கில் இப்புரோகிதர்களும் அவர்களின் அப்பன், பாட்டனும்கூட, கடந்த 400 தலைமுறைகளாக வேதத்தின் சிறு பகுதியைக் கூடப் பார்த்ததில்லை. ஆசாரங்களைக் கடைப்பிடித்து மிகக் கீழான இழிநிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். இந்த யுகத்தில் பார்ப்பனர் உருவில் இருக்கும் அரக்கர்களான இவர்களிடமிருந்து மக்களையும் நாட்டையும் தெய்வம்தான் காப்பாற்ற வேண்டும் என்றே கடுஞ்சொற்களால் திட்டித்தீர்த்து இருக்கிறார்.
Rascally and Wily Priests â¡Aø£˜. All Sorts of Mummery and Tomfoolery Gist of Vedas â¡Aø£˜. Rascals of Priests என்கிறார்.
என்னே பொருத்தமான அடைமொழிகள்!
இந்து மதத்திற்கு அவர் தரும் நற்சான்றிதழ்களைப் பாருங்கள்: No Religion on Earth Treads upon the Necks of the Poor and the Low in such a Fashion as the Hinduism   (உலகில் எந்த ஒரு மதமும் இந்து மதத்தைப் போல, அம்மதத்தைச் சார்ந்த ஏழைகளையும் கீழ்நிலையில் இருப்பவர்களையும் கழுத்தைப் போட்டு மிதிப்பதில்லை) (தொகுப்பு 5, பக்கம் 15).
உதைக்க வேண்டும்
இந்துமதக் கொடுமைகளைப் போக்கிட வழியும் கூறியுள்ளார் விவேகானந்தர். வாருங்கள், மனிதர்களாகுங்கள். எந்தவித முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ள புரோகிதர்களை உதைத்துக் துரத்துங்கள். அவர்கள் மனது என்றைக்கும் விரிவு அடையாது. பல நூற்றாண்டுக்கால மூடநம்பிக்கைகளின் வழித் தோன்றல்கள். கொடுங்கோன்மையின் வாரிசுகள். புரோகித முறையை ஒழித்துக் கட்டுவோம் வாருங்கள்! என்று அறைகூவல் விடுத்தார். எத்தனைப் பேர் கேட்டார்கள்? (தொகுப்பு 5, பக்கம் 10).
முளைக்கும் புது மதம்
நமது மதத்தில் உள்ள புரோகித முறையை அடியோடு ஒழித்துக் கட்டுங்கள். அப்போது உலகிலேயே சிறந்த புதிய மதம் ஒன்று உங்களுக்குக் கிடைக்கும் என்றே சொல்லிப் பார்த்தார். எத்தனைப் பேர் முன்வந்தனர்? (தொகுப்பு 4 பக்கம் 368).
இந்து மதத்தைப் பற்றிப் பெருமையாக உலக மதங்களின் மாநாட்டில் (சிகாகோ நகரில்) பேசினார் என்பார்கள். அந்தச் சிறப்பு அம்மதத்தில் இருக்குமானால், அதற்குக் காரணமானவர்கள் பார்ப்பனர்கள் அல்ல என்றார் விவேகானந்தர்.
சத்திரியர்கள் மட்டுமே காரணர் என்கிறார். உபநிஷத்களை எழுதியோர் யார்? ராமன் யார்? கிருஷ்ணன் யார்? கவுதம புத்தர் யார்? சமண தீர்த்தங்கரர்கள் யார்? சத்திரியர்கள் போதித்தவை எல்லாம் அனைத்து மக்களுக்குமானவை. பார்ப்பனர்கள் எதைப்பற்றி எப்போது எழுதினாலும் (அது அவாளுக்கு மட்டுமே) அவற்றை மற்றவர்களுக்கு மறுத்தார்கள் என்கிறார் விவேகானந்தர். (தொகுதி 4, பக்கம் 359).
விவேகானந்தர் பவுத்தர்
புத்தரே எனது இஷ்ட தெய்வம். (Ishta God) நான் பவுத்த மதத்தவனல்ல. ஆனாலும் நான் ஒரு பவுத்தன். (I am not a Buddhist and Yet I am)  என்றே அவர் அமெரிக்காவில் பிரகடனப்படுத்தினார். (தொகுதி 1, பக்கம் 21).
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் வேதாந்தம் எதிர்கால மதமா? எனும் தலைப்பில் பேசிய போது, எல்லா மதங்களும் இறுதிநிலை பற்றிய கருத்தை (வேதாந்தத்தை) ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். இந்துமதக் குழப்பக் குப்பைக் கொள்கையான வேதாந்தத்தை அல்ல. (தொகுதி 8).
கடவுளை ஒழியுங்கள்
மூடநம்பிக்கைகள் எல்லாம் ஒழியட்டும். ஆசார்யர்களோ, தரும நூல்களோ, தெய்வங்களோ கிடையாது. கோயில்களை, அர்ச்சகர்களை, தேவதைகளை, அவதாரங்களை, கடைசியாகக் கடவுள்களையும் ஒழித்துக் கட்டுங்கள். அறிஞர்களே எழுமின். பயம் கொள்ள வேண்டாம். கடவுளைப் பற்றிப் பேசுவதை நிறுத்துங்கள். மூடநம்பிக்கைகள் பற்றிப் பரப்புரைக்காதீர்கள். உண்மைதான் வெல்லும். என் மனதில் கடவுள் தோன்றும். நான்தான் அதனைத் தோற்றுவிக்கிறேன். மற்றைய மூடநம்பிக்கைகளைப் புறந் தள்ளுங்கள்... என்றாரே! (தொகுதி 1, பக்கம் 502).
இத்தனையையும் தெளிவாகப் பேசிய விவேகானந்தரை மறைத்து அவரை வீரத்துறவியாக்கி இந்துமதத்துக்குச் சொந்தம் என்றாக்கி விட்டார்களே! அணைத்து அழித்தல் என்பது இதுதான்!
அவர்கள் இந்து அல்ல
விவேகானந்தர் இந்து அல்ல. அவரின் குரு ராமகிருஷ்ணன் என்பவரும்கூட இந்து அல்ல.  வங்காளப் பார்ப்பனராகப் பிறந்தார். எனினும் தம் பூணூலையும் புழுதி மண்ணையும் சமமாகக் கருதினார். மண்ணை ஆற்றில் வீசியதைப் போலவே பூணூலையும் ஆற்றில் வீசி எறிந்தார். மனிதன் ஆனார். அத்வைதியாக இருந்தவர் பின் இசுலாம் பற்றிப் படித்து அறிந்து கொண்டார். கிறித்துவ நெறியையும் பற்றித் தெரிந்துகொண்டு போற்றினார். இசுலாமியரைப் போலவும் கிறித்துவரைப் போலவும் ஆடை உடுத்திக் கொண்டார். அக்கொள்கைகளைச் சார்ந்தவர்களின் இல்லங்களில் அவர்கள் சமைத்த உணவை உண்டார். மதக்கட்டுகள் அற்று உலகை நேசிப்பவராக மாறினார். அவரது பெயரால் செயல்படும் தொண்டு நிறுவனம்கூட இந்துமதம் சார்ந்த நிறுவனம் அல்ல. எம்மதமும் சாராத மும்மதம் சார்ந்த நிறுவனம்தான். எனவே சிறுபான்மையரின் நிறுவனம் எனும் தகுதிகோரி நீதிமன்றம் மூலம் ஆணை பெற்றுள்ளனர்.
ஆனால் ஒரு மயக்கத்தை உண்டுபண்ணி இந்து மதத்தைப் போல, தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றுகிறார்கள். விவேகானந்தரையும் இந்துமதச் சிமிழுக்குள் அடைக்க முயல்கிறார்கள்.
நால்வர்ணம் நாட்டில் இல்லை. இருப்பது பார்ப்பனர், சூத்திரர் என்ற இரண்டே வர்ணம் மட்டுமே! என்றார் விவேகானந்தர். இதே கருத்தைத் தந்தை பெரியாரும் சொன்னார். பார்ப்பனரும் சூத்திரரும் மட்டுமே வாழும் நாட்டில் வசிக்கக் கூடாது என்று இந்துமத சாத்திரங்கள் கூறும் நிலையில், பார்ப்பனர்கள் இந்த நாட்டை விட்டுத் தொலைந்து போகட்டும் என்றவர் விவேகானந்தர். பார்ப்பனர்கள் மிலேச்சர்களின் உணவை உண்கிறார்கள். அதற்கான தண்டனை / கழுவாய் என்று சாத்திரம் குறிப்பிடும் முறை என்ன தெரியுமா? அவர்கள் தங்கள் கையால் தங்களுக்குத் தாங்களே நெருப்பு வைத்துப் பற்றி எரிந்து சாக வேண்டும். அதைப்போல செய்துகொள்வீர்களா? என்று கேட்கிறார். (கருத்துகள் தொகுப்பு 3, பக்கம் 339).
ஆக, இராமகிருஷ்ணனையும் விவேகானந்தரையும் இந்தக் கொடிய படுபாதக இந்துமதப் பார்ப்பனர்களின், புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
- சார்வாகன்
நன்றி : http://www.unmaionline.com/new/2062-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-x-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-2.html




Wednesday, March 12, 2014

கவிக்குயில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம்

சிவகாசி 2014 மார்ச் 9:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சிவகாசி கிளை சார்பில் மறைந்த கவிக்குயில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம் ஏ.ஆர். பிக் லீப் ஆலுவலகத்தில் 2014 மார்ச் 9 ஞாயிறன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. 



கிளைச் செயலாளர் கனிமொழி கருப்பசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விருதுநகர் மாவட்டத் தலைவர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞானன் அவர்களின் திருவுருவப் படத்தை மாநில தலைமைக் குழு உறுப்பினர் முனைவர் பொ.நா.கமலா அவர்கள் திறந்து வைத்தார். மேலும் அன்னாரின் நினைவுகள் பலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ‘கவிக்குயில் கவிஞர் செ.ஞானனின் கவிதை ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஞானன் கவிதைகள், ஓர் ஊமைக்காதலின் மௌனராகங்கள், இனியது புரிவது வாழ்வு, பாடு குயிலே பாடு, என்ன சொல்லி அழைக்க, சிந்தனை மின்னல்கள், வறுமை ஓரு தடையல்ல, அர்ச்சனைப் பூக்கள், ஒளிகள் மற்றும் தாமிரபரணிக் கரையினிலே ஆகிய கவிதை நூல்களை முறையே கவிஞர் பாண்டூ, ‘இன்று’ பத்திரிகையாசிரியர் ஷாகுல் ஹமீது, சிறுகதையாளர் காளிராஜன், கவிஞர் கலாராணி, எழுத்தாளர் ஸ்வரமஞ்சரி, கவிஞர் சேகர், கவிஞர் இ.கி.முருகன், பேராசிரியர் நயினார், எழுத்தாளர் முத்துபாரதி மற்றும் பேராசிரியர் பொ.நா.கமலா ஆகியோர் சிறப்பாக எடுத்துரைத்தனர். கனிமொழி கருப்பசாமி மற்றும் சேகர் கவிதாஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் வெ.மகாலட்சுமி, என்.முத்துக்குமார், சாத்தூர் கதைசொல்லி இராம்மோகன், கோவில்பட்டி செம்மைநதிராசா, கழுகுமலை கிருஷ்ணன், நக்கீரன் நிரூபர் சி.ந.இராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளைத் தலைவர் ஸ்வரமஞ்சரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Friday, February 21, 2014

சான்றோர் சொல்

 நம்மைத் தூக்கி எறியும் குதிரையைவிட
 நம்மை சுமந்து செல்லும் கழுதையே மேலானது.
        @தாமஸ் புக்கர்

கெட்ட அரசாங்கம் தனக்கு வேண்டியவர்களுக்கு
வேலைக் கொடுக்கிறது. ஆனால் நல்ல அரசாங்கம்
தகுதி உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கிறது.
         @வார்டு ஹாலிபாக்ஸ்

விவசாயிகள் நம் நாட்டின் மாபெரும் சக்தி,
தொழிலாளி வர்க்கத்தின் விசுவாசமுள்ள கூட்டணி.
       @ஹோ-சி-மின்


நம்பிக்கை உள்ளவனுக்கு வெற்றிக்கான கதவு
தானாகத் திறந்துவிடும்
    ஈசாப்                       


மனிதனால் அடைய முடியாதது எதுவும் இல்லை

தாயின் இதயத்தில் தான் அன்புமலர்
எப்போதும் மணம்வீசிக் கொண்டிருக்கும்
   @ இங்கர்சால்

இரும்புபோன்ற மனிதனையும் புடம்போட்டு
உருவாக்கும் அக்னிதான் பெண்
தே

பிறரை மகிழ்விப்பதுதன் மகிழ்ச்சிக்கான
வழியாகும்
இங்கர்சால்

ஒரு மனிதனின் நினைப்புகள்தன்
அவனுடைய சாதனைகளாக மாறுகிறது
ஷில்லர்

தியாகிகளின் சமாதிகளே நமது ஆராதனைக்குரிய 
தேவாலயங்கள்  
பிடல் காஸ்ட்ரோ
நிகழ் காலத்தை விலையாகக் கொடுத்துத்தான்
எதிர்காலம் வாங்கப்படுகிறது
@ ஜான்சன்


காந்தாரக் கலை


இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி காந்தாரம் ஆகும். தற்போது காந்தகார் என்று அழைக்கப்படும் பகுதிதான் முந்தைய காந்தாரம் என்று கருதுகின்றனர். வடமேற்குப் பாகிஸ்தானில் மத்திய சிந்து நதியின் இருமருங்கிலும் இப்பகுதி இன்று அமைந்துள்ளது. இதன் முக்கிய நகரங்களாக தட்சசீலமும் (TAXILA) பெஷாவரும் (OESGWAR) விளங்கி வந்துள்ளன. தொன்மைக் காலத்தில் பெர்ஸியப் பேரரசின் கீழ் இப்பகுதி இருந்தது.

கி.மு.327-ல் அலெக்ஸாண்டர்தம் படையெடுப்பின் போது இங்கு வந்துள்ளார். பின்பு கி.மு.நான்காம் நூற்றாண்டிலேயே சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் கீழ் வந்தது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் ஆட்சிப் பொறுப்பேற்றபின் அவர் இப்பகுதியைப் பௌத்தத்திற்கு மாற்றினார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலிருந்து கி.மு.முதல் நூற்றாண்டு வரை இது பாக்டீரியாவின் பகுதியாக மாறியது. குஷாணர் காலத்தில் (கி.பி.1ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டுவரை), குறிப்பாக கனிஷ்கர் ஆட்சிக் காலத்தில் சிறந்த சிற்பக்கலை மையமாகத் திகழ்ந்தது. பௌத்தக் கலையின் மூன்று முக்கிய கலைக்கூடங்களான காந்தாரம், மதுரா, அமராவதி ஆகியவற்றில் இது முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. காந்தாரம் பல அயல் நாட்டுத்தாக்கங்களுக்கும், பண்பாட்டுத் தாக்கங்களுக்கும் ஆளாயிற்று. கிரேக்க உரோமானிய நாடுகளின் கலைக் கூறுகளைத் தன்னுள் எடுத்துக் கொண்ட காந்தாரம், சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளின் கலைகளில் மாற்றங்களை விளைவிக்கத் தவறவில்லை.

தட்சசீலத்தில் அகழ்வாராய்ச்சி செய்த சர்ஜான் மார்ஷல் காந்தாரக் கலைச் சின்னங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றார். முதல் பிரிவானது, பெஷாவர் பள்ளத்தாக்கில் உருவான கலைப்படைப்புகள் ஆகும். இங்கு கிடைத்த சிற்பங்கள் இங்கேயே வெட்டி எடுக்கப்பட்ட நுண்துகள் (Finely grained) கட்டமைப்புக் கொண்ட நேர்த்தியான கற்கலால் வடிக்கப்பட்ட வையாகும். இரண்டாவது பிரிவு, காந்தாரத்தில் இல்லாமல் ஆப்கானிஸ்தானத்தில் உருவானது. இதனைச் சார்ந்த சிற்பங்கள் கதை (stucco)யினால் அல்லது களிமண்ணால் செய்யப்பட்டவை. இவை, தட்சசீலம் மற்றும் ஆக்பெஸ் நதிவரையான பரந்த பகுதியில் கிடைக்கின்றன. இப்பிரிவு கி.பி.4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி 5 ஆம் நூற்றாண்டின் முடிவில், ஹீனர்களின் படையெடுப்பு நிகழும் வரை, செழித்து வளர்ந்தது. ஹீனர்களால் இக்கலைக் கருவூலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
-    முனைவர் கு.சேதுராமன்
( நன்றி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ‘பௌத்த

சமயக்கலை வரலாறு’ எனும் நூல்’

கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி பாக்கி

கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.2.46 லட்சம் கோடி: வரிபாக்கி

புதுடில்லி: கார்ப்பரேட்  நிறுவனங்கள் ரூ.2.46 கோடி வரி பாக்கி வைத்துள்ளன. அத்தொகையை வசூலிக்க வருமான வரித்துறை புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளது.
இத்தகவலை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜே.டி.சீலம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமைத் தெரிவித்தார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி பாக்கி ரூ.2,46,416 கோடியாகும், அதில் 45 நிறுவனங்கள் தலா ரூ.500 கோடிக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளன. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3,139 சோதனைகளை மேற்கொண்ட வருமான வரித்துறை ரூ.5654 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.2012-13 இடையிலான காலக்கட்டத்தில் 3889 சோதனைகளை மேற்கொண்டு 575.08 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
ஜனசக்தி
09-02-2014



சில சமூக வழக்கங்கள்


தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாத சில விந்தையான சமூக வழக்கங்களைச் சங்க இலக்கியங்களில் காணலாம். விருந்தினரை விரைந்து செல்லுமாறு பணிக்கும் மரபு வடமொழியில் “சதபதி” என்று அழைக்கப்பட்டது. இதைப் பற்றி பொருநர் ஆற்றுப்படை குறிப்பிடுகிறது. இதன் படி, தன் விருந்தினரை வழியனுப்பச் சென்ற கரிகாலன் ஏழு அடிகள் வைத்தபின், நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிக்கொள்ளுமாறு அவர்களை வேண்டிக் கொண்டான். ஒவ்வொரு குடும்பத்திலும் தலைவன் உணவு உண்ணுமுன் ஒரு கைப்பிடி சோறும் இறைச்சியும் காக்கைகளுக்கு அளித்தான். பசுவதை, கருசிதைவு, அந்தணரைக் கொல்லுதல் ஆகியவை மிகக் கொடுமையான குற்றங்களாகக் கருதப்பட்டன. ஆனால் செய்நன்றி மறத்தல் இவற்றை எல்லாம்விட பெரிய குற்றமானது என்று அக்காலத்து நம்பிக்கை நிலவியது.

கணிகையர் பெண்கள் தம் தொழில் நடை முறைக்கு மாறாகத் தவறுகள் இழைப்பார்களேயானால், அவர்கள் தம் தலைமீது ஏழு செங்கற்களைச் சுமந்து பொது அரங்குகளைச் சுற்றிவருமாறு தண்டிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கணிகையர் ஜாதியினின்றே விலக்கப்பட்டனர். பெண்டிர் செய்த பாவங்களை, குமரி முனையில் கடல் நீராடிப் போக்கிக் கொள்ளலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக ஒப்புக்கொள்ளப்பட்டது. குழந்தைப் பேற்றுக்குப் பிறகு, பத்தாம் நாள் இரவு, தாய்மார்கள் ஏரி, குளங்களில் நீராடினர். பேய் பிடித்தல் கண்படுதல் போன்றவற்றை மக்கள் நம்பினர். இவற்றினின்று காத்துக்கொள்ள நெய், வெள்ளைக் கடுகு ஆகியவற்றால் குழந்தைகளின் முடிகளை அலங்கரித்தனர். மந்திரித்தல், சகுனம் பார்த்தல் போன்ற நம்பிக்கைகள் நிலவின. கண்ணகியின் இடதுகண்ணும், மாதவியின் வலது கண்ணும் துடித்தமையால், இந்திர விழா நாளில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பற்றி முன்பே அறிய முடிந்தது என்று சிலப்பதிகார ஆசிரியர் விரிவாகக் கூறுகிறார்.
சவ அடக்கம் :
        இறந்தவர்களின் உடல்களை இரு வகையாக அடக்கம் செய்தனர். எரித்தல், அல்லது தாழிகளில் இட்டுப் புதைத்தல் அல்லது தாழிகள் இல்லாமல் புதைத்தல் போன்ற மரபுகள் வழக்கில் இருந்தன. சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்க்கும் மாறுபட்ட வழக்கங்கள் கையாளப்பட்டன. இறந்த முனிவர்களுக்கும், மன்னர்களுக்கும் உடன்கட்டை ஏறிய பெண்டிருக்கும் அவரது உறவினர்களால் வெவ்வேறு அமைப்புகளுடைய சமாதிகள் (செங்கற்களாலான கல்லறைகள்) கட்டப்பட்டதாக மணிமேகலை கூறுகிறது. இத்தகைய கல்லறைகளின் வடிவம் இறந்தவர்களின் சமூக அமைப்பு ஆகியவற்றுக்குத் தக்கப்படி மாறுபட்டது. சவ ஊர்வளத்தில் கொட்டப்பட்ட இசைக்கருவிகளின் ‘டுண்டுண்’ என்ற ஒலி, கேட்போரின் மனத்தில், “உனக்கும் ஒருநாள் சாவு உண்டு என்ற அச்சத்தை எழுப்பியது என்று இப்பாடலிலிருந்து அறிகிறோம்.

சதி அல்லது உடன்கட்டையேறுதல் :
        உடன்கட்டை ஏறும் பழக்கம் ஓரளவு நிலவிவந்தது. ஆனால், இப்பழக்கத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை கணவனை இழந்த பெண்கள் தாங்களும் உடன்கட்டை ஏறுவதிலிருந்தும் தடுக்கப்பட்டனர் என்பதையும், இவ்வழக்கத்தைத் தமிழர்கள் ஊக்குவிக்க வில்லை என்பதையும், பூதப்பாண்டியன் மனைவி வாயிலாக அறியலாம். அவளுடைய சொற்கள் பெரும் புகழுடன் நின்று நிலவுகின்றன. ஆனால் சதியை மேற்கொண்ட பெண்களின் வீரத்தையும் கணவனிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தியையும் அனைவரும் பெரிதும் பாராட்டினர். உடன்கட்டை ஏறுவது என்பது பரவலான வழக்கமாக இல்லை. அது விதிவிலக்காகவே இருந்தது கணவனை இழந்த எந்தப் பெண்ணும் உடன்கட்டை ஏறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக நாம் அறிவவில்லை.

பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
(நன்றி: நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை
சங்ககால ஆட்சி முறையும்
சமூக வாழ்வும் எனும் நூல்)

ஜனசக்தி 10-02-2014