Wednesday, March 12, 2014

கவிக்குயில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம்

சிவகாசி 2014 மார்ச் 9:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சிவகாசி கிளை சார்பில் மறைந்த கவிக்குயில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம் ஏ.ஆர். பிக் லீப் ஆலுவலகத்தில் 2014 மார்ச் 9 ஞாயிறன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. 



கிளைச் செயலாளர் கனிமொழி கருப்பசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விருதுநகர் மாவட்டத் தலைவர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞானன் அவர்களின் திருவுருவப் படத்தை மாநில தலைமைக் குழு உறுப்பினர் முனைவர் பொ.நா.கமலா அவர்கள் திறந்து வைத்தார். மேலும் அன்னாரின் நினைவுகள் பலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ‘கவிக்குயில் கவிஞர் செ.ஞானனின் கவிதை ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஞானன் கவிதைகள், ஓர் ஊமைக்காதலின் மௌனராகங்கள், இனியது புரிவது வாழ்வு, பாடு குயிலே பாடு, என்ன சொல்லி அழைக்க, சிந்தனை மின்னல்கள், வறுமை ஓரு தடையல்ல, அர்ச்சனைப் பூக்கள், ஒளிகள் மற்றும் தாமிரபரணிக் கரையினிலே ஆகிய கவிதை நூல்களை முறையே கவிஞர் பாண்டூ, ‘இன்று’ பத்திரிகையாசிரியர் ஷாகுல் ஹமீது, சிறுகதையாளர் காளிராஜன், கவிஞர் கலாராணி, எழுத்தாளர் ஸ்வரமஞ்சரி, கவிஞர் சேகர், கவிஞர் இ.கி.முருகன், பேராசிரியர் நயினார், எழுத்தாளர் முத்துபாரதி மற்றும் பேராசிரியர் பொ.நா.கமலா ஆகியோர் சிறப்பாக எடுத்துரைத்தனர். கனிமொழி கருப்பசாமி மற்றும் சேகர் கவிதாஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் வெ.மகாலட்சுமி, என்.முத்துக்குமார், சாத்தூர் கதைசொல்லி இராம்மோகன், கோவில்பட்டி செம்மைநதிராசா, கழுகுமலை கிருஷ்ணன், நக்கீரன் நிரூபர் சி.ந.இராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளைத் தலைவர் ஸ்வரமஞ்சரி அனைவருக்கும் நன்றி கூறினார்.