Friday, November 30, 2012

ஜனநாயகத்தை மென்று விழுங்கும் சாதி

மிகச் சாதாரணமாய் நடந்து முடிந்த
அசுரவேட்டையிது
சாதியின் எரிதழல் கொண்டு நீ
எரியூட்டிய‌ நெருப்பில்
உருசிதைந்து போனது நத்தம் சேரிக்குடிசைகள்
நடமாடும் மனிதர்களைத் தவிர
வேறெதுவும் மிஞ்சிடவில்லை
ஜனநாயகத்திற்கெதிராக எழுதப்பட்ட
உன் வாய்ச்சவுடாலில்
எரிந்து சாம்பலாகிப் போனது
சேரி மக்களின் உடைமையும் வாழ்க்கையும்
எதற்கும் பயன்படாத சாதியை
வெஞ்சினம் மூட்டி
தீயிட்டுக் கொளுத்துவதன் மூலம்
நிலைநிறுத்த முயற்சிக்கிறாய்
உடைமையிழந்தவர்களை நிம்மதியிழந்தவர்களை
தேற்றுவதற்கோ, ஆறுதல் சொல்வதற்கோ
நம்மிடையே யாருமில்லை
எங்கோ நடந்து முடிந்ததாய்
பெருமூச்செறியும் தாழ்த்தப்பட்டோர் ஒருபுறமிருக்க
சாதி கடந்து கைகுலுக்கி தலித்அரசியலை
நிலைநிறுத்திய தலித் அரசியல் கட்சிகள் மறுபுறமிருக்க
இரணங்களின் காயம் வடுக்களாய் மாறி
நம்மீது எச்சிலை உமிழ்கிறது.
எரியூட்டப்பட்ட நெருப்புக்குக் காரணம்
சாதி மறுப்புத் திருமணமென்று நியாயம் பேசுகிறது
ஊடகங்களும் உளவாளிகளும்…
சனநாயகத்தை மென்று விழுங்கும்
சாதி வன்மம் மறந்து,
சாதி ஆதிக்கம் மறந்து.
இதுவரை நடந்தேறிய வன்முறைகளுக்கெல்லாம்
சாதி மறுப்புத் திருமணம் தான் காரணமெனில்
சூளுரையேற்போம்…
இனி நடக்கவிருக்கும் திருமணங்கள்
சாதி மறுப்புத் திருமணங்களாய்
விதைத்தெழுவோம்!!
- வழக்கறிஞர் நீதிமலர்

No comments:

Post a Comment